No icon

(செப் 3:14-17, பிலி 4:4-7, லூக் 3:10-18)

கலங்காத மகிழ்ச்சி - திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றைகௌதேத்தே தொமெனிக்கே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) எனக் கொண்டாடுகிறது திருஅவை. மகிழ்ச்சி என்றால் என்ன? ‘சிரிப்பு,’ ‘இன்பம்,’ ‘சந்தோஷம்,’ ‘நிறைவு,’ ‘உடல் நலம்என நாம் பல வார்த்தைகளைச் சொன்னாலும், எந்த வார்த்தையும் மகிழ்ச்சி என்ற உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சி என்பது ஒருரெலடிவ்’ (சார்பியல்) வார்த்தை. அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்றை வரையறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். பசியாக இருக்கும் எனக்கு ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால், அதே சாப்பாட்டுப் பொட்டலம் பசியில்லாத ஒருவருக்கு, அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவருக்கு சுமையாகத் தெரிகிறது. ஒரே பொட்டலம்தான். ஆனால், அது ஒரே மாதிரியான மகிழ்ச்சி உணர்வை எல்லாருக்கும் தருவதில்லை. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? ‘உள்ளிருந்து வருகிறதுஎன்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன? ‘வெளியிலிருந்து வருகிறதுஎன்றால், மகிழ்ச்சி நிபந்தனைக்குட்பட்டதாகிவிடுமே! மேலும், என் மகிழ்ச்சி சார்பு நிலையின் வெளிப்பாடாக அமைந்து விடுமே! அடுத்தவர் இல்லை என்றால் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றாகிவிடுமே!

மகிழ்ச்சி ஓர் அமைதியான குளம் என வைத்துக்கொள்வோம். அந்த அமைதியான குளத்தின் நடுவில் விழும் ஒரு சிறிய கூழாங்கல் குளத்தில் கலங்கலை ஏற்படுத்திவிடுகிறது. அக்கல் விழுந்த இடத்தில் உருவாகும் சிற்றலை விரிந்து விரிந்து குளத்தின் கரையை மோதும்போது அங்கிருக்கும் கரையும் கலங்குகிறது. கலக்கம் குளத்தின் அமைதியைக் கெடுக்கிறது. நம் வாழ்விலும் கலக்கங்களே மகிழ்ச்சியைக் குலைக்கின்றன. ஒரு சொல்லாக, சிந்தனையாக, செயலாக விழும் கூழாங்கல் நம் மூளை, மனம், உடல் என அனைத்திலும் ஒரு சிறு அசைவையாவது ஏற்படுத்திவிடுகிறது. கூழாங்கல் ஏற்படுத்தும் கலக்கம் குளத்தின் மேற்பரப்பில் மட்டுமல்லாமல், குளத்தின் அடியில் சென்று தேங்கியிருக்கும் களிமண்ணையும் கலக்கிவிடுவது போல, கலங்கிய மூளை, மனம், உடல் சேமித்து வைத்த பழைய அழுக்குகளையும் கீறி விடுகிறது. கலக்கமில்லாத மகிழ்ச்சி சாத்தியமா? குளங்கள் விரும்பவில்லை என்றாலும், கூழாங்கற்கள் வந்து விழுந்தால், அது குளத்தின் குற்றமில்லையே? கலங்காத குளம் சாத்தியமா? கலங்காத மகிழ்ச்சி சாத்தியமா?

இன்றைய இறைவார்த்தை வழிபாடுமகிழ்ச்சிஎன்ற சொல்லாடலை எப்படிப் புரிந்து கொள்கிறது?

முதல் வாசகம் (காண். செப் 3:14-18) இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 612 ஆம் ஆண்டில், யோசியாவின் ஆட்சி முடிந்த சில ஆண்டுகளில், அல்லது அவரது ஆட்சியின் இறுதி நாள்களில் இறைவாக்குரைத்த செப்பனியாவின் இறைவாக்கு நூல் பெரும்பாலும் எருசலேமின் அழிவைப் பற்றியே பேசுகிறது. மேலும், நூலின் இறுதியில், தண்டனைத் தீர்ப்பளிக்கும், எதிர்கொள்ளக் கொடியதாய் இருக்கும். ‘ஆண்டவரின் நாள்பற்றியும் பேசுகிறார் அவர். இன்றைய வாசகப் பகுதி அவரின் ஒன்பதாம் மற்றும் இறுதி இறைவாக்குப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அழிவு பற்றிப் பேசாமல் ஆறுதல் பற்றிப் பேசுகிறார் இறைவாக்கினர். எருசலேமைச் செல்லமாக, ‘மகளேஎன அழைப்பது வழக்கம். மேலும், ‘மகளேஎன்றால்குட்டி நகரம்என்பதும் பொருள். எருசலேமும், அதைச் சுற்றியிருக்கிற குட்டி ஊர்களும் அகமகிழுமாறு அழைப்புவிடுக்கிறார் செப்பனியா. ‘மகிழ்ச்சியால் ஆர்ப்பரி,’ ‘ஆரவாரம் செய்,’ ‘அக்களிஎன அவர் பயன்படுத்தும் மூன்று சொல்லாடல்களுமே மகிழ்ச்சியைக் குறித்தாலும், இவற்றின் எபிரேயப் பதங்கள் இன்னும் ஆழமான பொருளைத் தருகின்றன. அதாவது, ‘உள்ளத்தில்,’ ‘உதட்டில்,’ ‘நாக்கில்என மகிழ்ச்சி, உள்ளத்து உணர்வாகத் தொடங்கி, பெருஞ் சத்தமாக மாறுகிறது. மகிழ்ச்சி என்பது ஓர் இருப்பு என்ற நிலைமாறி, அது ஓர் இயக்கமாக உருவெடுக்கிறது. ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கும் - சோற்றுப் பொட்டலம் போல! எருசலேமின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன? ‘உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார். நாம் அன்புசெய்யும் நபர் நம் நடுவில் இருந்தால் நம்மைப் பற்றிக் கொள்ளும் மகிழ்ச்சி போல, நம் கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என்ற உணர்வை நமக்கு மகிழ்ச்சி தருகிறது.

இன்று ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்என்றால், இவ்வளவு நாள்கள் யார் இருந்தார்? ‘பகைவர்கள்,’ ‘எதிரிகளின் படைகள்,’ ‘விரும்பத்தகாதவர்,’ ‘கொலை செய்பவர்,’ ‘அழிப்பவர்என மற்றவர்கள் இருந்தார்கள். இவர்களின் உடனிருப்பு மக்களுக்கு அச்சம் தந்தது. மேலும், இவர்களின் உடனிருப்பு மக்களின் கைகளைச் சோர்வடையச் செய்தது. ஏனெனில் மக்கள் எந்நேரமும் அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டம் அவர்களின் உடலின் ஆற்றலைக் குறைத்தது. மேலும், இப்போது ஆண்டவர், ‘மாவீரராக, வெற்றி அளிப்பவராக, புத்துயிர் அளிப்பவராகஇருப்பதால், எதிரியாக இருந்தாலும் அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஆக, முதல் வாசகத்தின்படி, ‘ஆண்டவரின் உடனிருப்புகலங்காத மகிழ்ச்சியைத் தருகிறது.

இரண்டாம் வாசகம் (காண். பிலி 4:4-7) புனித பவுலடியார் பிலிப்பி நகரத் திருஅவைக்கு எழுதிய திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இம்மடல் பவுலின் சிறை மடல்களில் ஒன்று. என்ன ஒரு முரண்! சிறையின் துன்பம், தனிமை, விரக்தியில் இருந்துகொண்டு, ‘ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள். மீண்டும் கூறுகிறேன். ‘மகிழுங்கள்என அறைகூவல் விடுக்கின்றார் பவுல். ‘ஆண்டவர் அண்மையில் உள்ளார்என்ற பவுலின் காலத்தில் எல்லாரும் எதிர்நோக்கியிருந்த, ‘பருஸியாஎனப்படும்ஆண்டவரின் இரண்டாம் வருகையேபவுலின் மகிழ்ச்சி ஊற்றெடுக்கக் காரணமாக அமைகிறது.

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்என்கிறார் பவுல். மகிழ்ச்சிக்கான அழைப்பு நிலையற்றவற்றில் அல்லாமல், நிலையானவற்றில் இணைந்திருப்பதற்கான அழைப்பாக இருக்கிறது. ‘இணைந்திருத்தல்என்பது இன்று அதிகமாக சமூக வலைதள இணைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். செயலி, செல்ஃபோன், இணையதளம் என்னும் மூன்றின் வழியாக நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கிறோம். இந்த மூன்றில் ஒன்று தவறானாலும் இணைப்பு சாத்தியமில்லை. ஆண்டவரோடு எப்படி இணைந்திருப்பது? நமக்கும், இறைவனுக்கும் ஒரு தொப்புள் கொடி இருப்பது போல நினைத்து, அந்தத் தொப்புள் கொடி ஒரு புளுடூத் இணைப்பு போல இருப்பதாக நினைத்து வாழும்போது, நாம் எந்நேரமும் அவரோடு இணைந்திருக்க முடியும். தொடர்ந்து, ‘எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்என்கிறார் பவுல். ‘கலக்கம்அல்லதுகவலைமகிழ்ச்சியின் எதிரி என்பது பவுலுக்கும் தெரிந்திருக்கிறது. மேலும், நன்றியோடு இறைவேண்டல் செய்து, எல்லா நிகழ்வுகள், எல்லா நேரங்கள், எல்லா மனிதர்கள் என எல்லாரையும் இறைவன் - நான் தொப்புள் கொடியில் இணைத்துக்கொள்ளும்போது கலங்காத மகிழ்ச்சி சாத்தியமாகிறது.

ஆக, இரண்டாம் வாசகத்தின்படியும், ‘ஆண்டவரில் இணைந்திருத்தல்கலங்காத மகிழ்ச்சியைத் தருகிறது.

நற்செய்தி வாசகம் (காண். லூக் 3:10-18) கடந்த ஞாயிறு வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. கடந்த வார வாசகத்தில் திருமுழுக்கு யோவான் தன் பணியைத் தொடங்கினார். இன்றைய நாள் வாசகத்தில், அவர் திருமுழுக்கு வழங்கும் நிகழ்வும், முறையும், அந்நிகழ்வில் பங்கேற்றவர்களோடு அவர் மேற்கொண்ட உரையாடலும் தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் திருமுழுக்கு பெறுவதற்காக யோவானிடம் மூன்று குழுவினர் வருகின்றனர். இரண்டாம் பகுதியில், தான் மெசியா அல்ல என்பதையும், மெசியா எப்படிப்பட்டவர் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார் யோவான்.

முதல் பகுதியில் வரும்மக்கள் கூட்டத்தினர்,’ ‘வரிதண்டுபவர்கள்,’ மற்றும்படைவீரர்கள்என்னும் மூன்று குழுவினரின் கேள்வி ஒன்றாக இருக்கிறது: ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ ‘இரண்டு அங்கிகளை உடையவர்கள் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும். உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்.’ ‘உங்களுக்காக குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்.’ ‘நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள். யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்.’ இவ்வாறாக, ஒவ்வொரு குழுவினருக்கும் வேறுவேறு வாழ்க்கைநிலை அறிவுரைகளைத் தருகின்றார் யோவான். நம் அலமாரி நிறைய ஆடைகள் இருந்தாலும், நாம் உடுத்துபவை வெறும் இரண்டு ஆடைகளே. நம் வீட்டில் அறைகள் பல இருந்தாலும், நாம் ஒவ்வொரு நேரத்திலும் இருப்பது வெகு சில அடிகளே. ‘நாளைஎன்ற உணர்வு தான் நம்மை இன்னும் அதிகம் சேகரிப்பவர்களாகவும், சேர்த்து வைப்பவர்களாகவும் மாற்றுகிறது. தொடர்ந்து, ‘குறிக்கப்பட்டதற்கு மேல் வரிதண்டஒருவரைத் தூண்டுவது, அவருடைய பேராசை. ‘அச்சுறுத்தல், பொய்க்குற்றம்வழியாக வருவது சுலப வருமானம். திருமுழுக்கு யோவானைப் பொருத்தவரையில் மனமாற்றம் என்பது வாழ்க்கை முறை அல்லது வாழ்க்கை நெறி மாற்றமாக இருக்கிறது. இந்தப் புரிதல் நமக்கு முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களின் கருத்தை நிறைவு செய்வதாக இருக்கிறது. அதாவது, வாழ்க்கை நெறி மாற்றமும் நமக்கு கலங்காத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

மேலும், நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில், மக்கள் தன்னை மீட்பராக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுணர்கிற யோவான், அவர்கள் கேட்காமலேயே, தானாக முன்வந்து, ‘என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார்என்று தன்னைப்  பின்னுக்குத் தள்ளி, இயேசுவை முன்னே கொண்டு வருகிறார். அதாவது, ‘உங்களுக்குக் குறித்துள்ளதற்கு மேல் போகாதீர்கள்என்று முதல் பகுதியில் அறிவுறுத்திய யோவான், தானே அதை வாழ்ந்தும் காட்டுகிறார். தனக்குக் குறிக்கப்பட்ட எல்யையைத் தாண்ட மறுக்கிறார். இவ்வாறாக, தன் மகிழ்ச்சி என்பது தன் அடையாளத்திலிருந்து வருவது அல்ல; மாறாக, அது அடையாளங்களைக்  களைவதில் தான் இருக்கிறது என நமக்கு அறிவுறுத்துகிறார் யோவான்.

இவ்வாறாக, மகிழ்ச்சி என்பது () ‘ஆண்டவர் நம் நடுவில் உள்ளார்எனக் கண்டு கொள்வதிலும், () ‘ஆண்டவரோடு இணைந்திருத்தலிலும்,’ () ‘வாழ்க்கை முறையை மாற்றுவதிலும்,’ மற்றும், () ‘தன்னை அறிதலிலும்இருக்கிறது என எடுத்துரைக்கின்றன வாசகங்கள்.

கலங்காத மகிழ்ச்சி. இது எப்போதும் நமக்குக் கிடைக்குமா?

நம் வாழ்வில் எல்லாம் நன்றாகப் போகும்போது - உணவு, உடைகள், உறைவிடம் என அடிப்படைத் தேவைகள் நிறைவேறி, செலவுக்குக்  கொஞ்சம் பணம், பேசிப் பழக சில நண்பர்கள், படிக்க ஒரு புத்தகம், பார்க்க ஒரு வேலை என இருக்கும்போது - மகிழ்ச்சி இயல்பாக வருகிறது. ஆனால், அடிப்படைத் தேவைகள் இல்லாதபோது நான் எப்படி மகிழ முடியும்? என் வீடும், தோட்டமும் புயலால் அல்லது வெள்ளத்தால் அழிக்கப்படும்போது நான் எப்படி மகிழ முடியும்? என் வேலை, திருமணம், குடும்பம் உடையும்போது நான் எப்படி மகிழ முடியும்? நான் நோய்வாய்ப்பட்டு, முதுமையில், தனிமையில் படுக்கையில் கிடக்கும்போது நான் எப்படி மகிழ முடியும்? என் அன்பிற்குரியவர் இறக்கும்போது, அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாதபோது நான் எப்படி மகிழ முடியும்? என் பணம் எல்லாம் திருடப்படும் போது, என் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது, என்னை ஆள்பவர்கள் சுயநலமாக இருக்கும்போது என்னால் எப்படி மகிழ முடியும்? என்னும் கேள்விகள் தவிர்க்க முடியாதவை.

ஆர்ப்பரித்து அக்களியுங்கள். இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்” (காண். திபா 12) எனப் பாடுகின்றார் எசாயா. இறைவன் நம் நடுவில் உள்ளார் என்னும் அனுபவம் கலங்காத மகிழ்ச்சியைத் தருகிறது.

ஒருவர் தன்னை அறிந்து, தன் அருகிலிருப்பவரை அறிந்து, தன் உள்ளது பகிர்ந்து, தன் இறைவனோடு இணைந்திருக்கும்போது, கலங்காத மகிழ்ச்சி காலத்திற்கும் சாத்தியம். நம் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பிரிக்கும் காரணிகளை, நம்மீது எறியப்படும் கூழாங்கற்களை நாம் அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து ஒதுங்குவது முதற்படி. அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தி, அந்த மகிழ்ச்சியில் நாம் புன்னகை பூப்பது இரண்டாம் படி. என் இறைவனே என் மகிழ்ச்சி என அவரில் சரணாகதி அடைவது மூன்றாம் படி. நாம் ஏற்றும் மூன்று திரிகளும் நம்மை இந்த மூன்று படிகளில் ஏறுவதற்கு நம் பாதையை ஒளிர்விக்கட்டும்.

அருள்முனைவர்  யேசு கருணாநிதி

Comment