No icon

துயருறும் கிறிஸ்தவர்கள்!

புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் UCF (United Christian Forum) எனப்படும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ அமைப்பானது, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய மாநிலங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்று அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மார்ச் 21-ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிக்கையொன்றில்மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 19 மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளது. இவ்வாண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை, ஏறத்தாழ 122 கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்ததாகப் பொய் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 161 வன்முறைச் சம்பவங்கள் தமது உதவி மைய எண்களில் பதிவாகியுள்ளதாக UCF தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த UCF அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் A.C. மைக்கேல்  அவர்கள், மதமாற்றத் தடைச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; மேலும், பெரும்பான்மைச் சமூகத்தைத் திருப்திபடுத்துவதற்காகச் சிறுபான்மைச் சமூகங்கள் தாக்கப்படுகின்றன என்று கூறினார்.

Comment