No icon

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை

55வது உலக அமைதி நாளின் தலைப்பு

"கல்வி, வேலை, தலைமுறைகளுக்கிடையே உரையாடல்: நிலைத்த அமைதியைக் கட்டியெழுப்பும் கருவிகள்" என்பது, 2022 ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படும் 55வது உலக அமைதி நாளுக்குத் தலைப்பாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, நவம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

இக்காலத்தின் மற்றும் வருங்காலத்தின் தேவைகளுக்குப் பதிலளிப்பதற்கு, கல்வி, வேலை, தலைமுறைகளுக்கிடையே உரையாடல் ஆகிய மூன்றும் முக்கியம் என்றும் ஒவ்வொருவரும், காலத்தின் தேவைகளை நம்பிக்கைக் கண்களால் வாசிக்கவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திவருகிறார் என அத்திருப்பீட அவை கூறியுள்ளது.

காலம் வெளிப்படுத்தும் அடையாளங்களை இவ்வாறு நோக்குவதன் வழியாக, புதிய முறையில் வாழ்வுப் பாதையை மாற்றமுடியும் என்று திருத்தந்தை கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள அத்திருப்பீட அவை, உலகில் நிலைத்த அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு கல்வி எவ்வாறு உதவும் என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

மனிதரின் முக்கியத் தேவையாகிய நீதி மற்றும் சுதந்திரத்திற்கு, வேலை எவ்வாறு பதிலளிக்க இயலும்? தலைமுறைகள், உண்மையிலேயே ஒருவர் ஒருவரோடு தோழமையில் வாழ்கின்றனவா? அவை, வருங்காலத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றனவா? இத்தகைய சூழலில், அமைதி குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அரசுகள் வெற்றி கண்டுள்ளனவா? போன்ற கேள்விகளையும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை முன்வைத்துள்ளது.

உலக அமைதி நாளை, திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அவர்கள், 1967 ஆம் ஆண்டு டிசம்பரில் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து, 1968 ஆம் ஆண்டு சனவரி முதல் நாளன்று, கத்தோலிக்கத் திருஅவையில் உலக அமைதி நாள் முதன் முறையாகச் சிறப்பிக்கப்பட்டது

Comment