No icon

Ascension Sunday - May 24, 2020

விண்ணைத்தேடி வருவாயா?! (ஆண்டவரின் விண்ணேற்பு (கொரோனா பின்னணியில்))

திப 1:1-11, எபே 1:17-23, மத் 28:16-20

மனித மனதை உலுக்கும் பல கேள்விகள்

மனித மனதை உலுக்கும் பல கேள்விகளுக்கு பதில் சரியாகத் தெரிவதில்லை. சில கேள்விகள் இறுதிவரை கேள்விகளாகவே இருந்து விடுகின்றன. அதுவும் நல்லதுதான். கடவுள் இந்த நாள்களில் கண்களுக்குத் தெரியாத கொரோனா என்ற நுண்ணுயிரியின் மூலம் இவ்வளவு நாள்கள் உலகைத் தண்டிப்பது ஏன்? செவ்வாய் கிரகத்தில் ஆட்டம்போட நினைத்த பலரின் கொட்டத்தையும் இது கொஞ்சம் அடக்கிவிட்டதே? (இது இயற்கையாகவே உருவாகி இருந்தால் கடவுள் அதற்கென்று மருந்தையும் உருவாக்கி இருப்பார் என்பதே எதார்த்தம்.) ஆனால் ஏன் இவ்வளவு வேதனை? என்ற கேள்விகள் நம்மை உலுக்குகின்றன. பல கேள்விகளுக்கான விடை படைத்த கடவுளிடம் மட்டுமே கிடைக்கும். இன்றைய விண்ணேற்புத் திருவிழா நாம் எங்கே செல்கின்றோம், மனித வாழ்வின் நோக்கம் என்ன? நாம் எப்படி இருப்போம்? மனித கண்களுக்கு மறைந்திருக்கும் மகிமை என்னென்ன? மண்ணக வாழ்வின் முடிவு என்ன? மகிமை பெற்ற உடலின் தோற்றம் என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடையாக அமைகின்றது. ஒருவருக்குத் தெரிந்திருக்கும் உண்மைகளைப் பலரும் அறிவதில்லை. அறிவின் முழுமையை இந்த உலகில் யாரும் அடைந்துவிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் அறிந்தவரே வாழ்வின் வழிகளைக் காட்டியுள்ளார். அவரே இன்று நம்பிக்கையுள்ளவர்களின் கண்களுக்குமுன் விண்ணகம் ஏறிச் செல்கின்றார்.

ஞானிகளுக்கு வெளிப்படும் விண்ணக உண்மைகள்

விண்ணகம் மனிதக் கண்களுக்குத் தொலைவில் இருந்தாலும் அதன் உண்மைகள் அவ்வப்போது வெளிப்படுகின்றன. ஞானமுடையோர் பேறுபெற்றோர் (மத் 11:25). கடவுள் தம் மனித கருவிகள் மூலம் பலவற்றைப் பலவகைகளில் எடுத்துரைத்துக்கொண்டே செல்வது, கடவுளது புதுப்படைப்பின் அங்கம். விண்ணகத்தில் புது விடியல்கள் நமக்காகக் காத்திருக்கின்றன என்பது நம்பிக்கை கொள்வோருக்கே வசப்படும். அப்படியான விண்ணக்காட்சிகளின் தொகுப்பாகவே திருவெளிப்பாட்டு நூல் அமைகின்றது. பிரகாசமான ஒளி, வானவர்களின் ஆரவாரம், வெண்ணிர ஆடையில் தோன்றும் புனிதர்களாகிப்போன மக்கள் கூட்டம், அனைவரும் அனைத்தும் முழுமையின் நிறைவை அடைதல் (முழுமையின் அடையாளமான எண் 7 மொத்தம் 54 முறை இடம்பெறுகின்றது), அரியணையில் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியின் முன் விழுந்து வணங்கும் முதியோர் போன்ற அனைத்தும் விண்ணகம் எப்படி இருக்கும் என்று யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட காட்சிகள். யாருக்கும் எதுவும் எப்போதும் விண்ணகத்தில் குறைவுபடாது என்ற கருத்தை திவெ 21:9-27 உருவகமொழியில் விளக்குகின்றது. எசாயா (1:1) தாம் கண்ட காட்சியையே நூலின் 66 பிரிவுகளிலும் வார்த்தை, வார்த்தைகள், உருவகங்கள், எச்சரிக்கைகள், வெளிப்பாடுகள் மூலம் விளக்குகின்றார். அவரின் அழைப்பிலும் விண்ணக காட்சியே இடம்பெறுகின்றது (எசா 6). தம்மையே முற்றிலும் இழந்து நின்ற ஏகாந்த நிலையிலேயே அழைப்புப் பெறுகின்றார் எசாயா. தமாஸ்கு செல்லும் வழியில் பவுல் எதிர்கொண்டதும், அவர் அறிவித்தவையும் வானம் திறந்து வெளிப்படுத்திய உண்மைகளே (1 தெச 4:13-18, 1 கொரி 15:1-11). அடிமையாகிப்போன தேசம், நசுக்கப்பட்ட மதம், கொடுமைக்கு உள்ளான நம்பிக்கையாளர்கள் - இந்தப் பின்புலத்தில் தானியேல் மீட்கப்பட்டோர் அனைவரும் விண்ணகத்தில் வாழ்வதைக் காண்கின்றார் (தானி 7:14-15). வனத்தில் வாழ்ந்தாலும் மண்ணக வரலாற்றை யாவே தீர்மானிக்கின்றார் என்ற உண்மை பல இடங்களில் கூறப்பட்டுள்ளது (விப 3:7, எசா 40:1).

அழிவுக்குரிய நிலையில் எதுவும் விடப்படுவதில்லை.

ஆழ்ந்து நோக்கும்போது அழிவுக்குரிய நிலையில் எதுவும் விடப்படுவதில்லை விதையின் ஒரு பகுதி செடியாகும், மற்றது தம் உருவத்தை மாற்றி உரமாகும். மரத்திலிருந்து விழும் இலைகூட சுழற்சி மாற்றம் அடைந்து மாற்றுருவம் எடுக்கின்றது. ஓசோன் படலத்தை மனிதன் அழிக்கலாம். அதைப் புதிதாகப் படைக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு. தண்ணீர் ஆவியாக, மேகமாக, மழையாக, சாரலாக, பனிமலையாக, அருவியாக, நதியாக, கடலாக சுழற்சி மாற்றம் அடைவதை நாம் பார்க்கின்றோம். மண்ணுக்கும் மலைகளுக்கும் உயிரில்லை என்று கூற முடியமா? விதை மண்ணைச் சார்ந்துதான் வாழ்கின்றது. மலைப்பாறைகளை உடைத்துக்கொண்டுதான் மரங்கள் வளர்கின்றன. பெரும்பாலான நதிகள் மலைகளில் தான் தோன்றுகின்றன. உருவாக்கும் தன்மை பூமிக்கு இருப்பதால் அது எபிரேய மொழியில் பெண்பாலாகும். மேலும், வாழ்வின் நிறைவை எய்திய உயிர்களின் உருவம் மாற்றம் பெறுகின்றது. கம்பளிப் பூச்சியின் முழுமை வண்ணத்துப் பூச்சியாவதுதான். தாயின் வயிற்றில் 10 மாதங்கள் வளர்ந்து குழந்தை முழு வளர்ச்சி பெறுகின்றது. ஒரு பழம் நிறைவு நிலையை அடைந்தபின் (விதையாக, உடலுக்கு உற்சாகம் தரும் பானமாக…) வேற்றுருவம் கொள்கின்றது. முட்டையின் நிறைவு குஞ்சாவதாகும். இயேசு தம் நிறைவின் முழுமை எய்துவதை இந்த விழா நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. (கடவுள் படைத்த தண்ணீரே ஆவியாகி மேலே செல்வதுபோல்) கடவுள் ஆவிக்குரிய உடலோடு மேலே செல்வது இயற்கையானதே. ஒரு கப்பலில் அனைத்து அறிவியல் சாதனங்களும் இருந்தாலும், அதற்கு வழிகாட்டும் திசைகாட்டித் தேவைப்படுகின்றது. அந்தத் திசையையே இயேசு காட்டி நிற்கின்றார்.

மண்ணக வாழ்வின் நிறைவு

ஒவ்வொரு ஞாயிறுத் திருப்பலியின்போதும் ‘இயேசு விண்ணகம் சென்றார்’ என்று அறிக்கையிடுகின்றோம். இயேசுவுக்குக் கடவுள் கொடுத்த பணித்திட்டத்தின் முழுநிறைவாக இந்த விண்ணேற்பு அமைகின்றது. விண்ணிலிருந்து வந்தவர் விண்ணகம் செல்கின்றார். மனிதனான கடவுள் மீண்டும் கடவுளாகின்றார். இயேசுவுக்கு விண்ணகம் செல்வதும் அவரது வலப்புறத்தில் அமர்வதும் கடவுள் அவருக்குத் தரும் பரிசுகள். தனியாக வந்தவர் உலகிற்;கு வழிகாட்டியாகிவிட்டார். எலியாஸ் இறைவாக்கினர், அன்னை மரியாளுக்கு தரப்பட்டதுபோல் இந்த விண்ணகப்பரிசு அனைவருக்கும் வாக்களிக்கப்படுகின்றது. மண்ணில் வாழ்வோம் அனைவரும் வானகமே நம் தாய் வீடு என்ற நம்பிக்கையில் வாழ அழைக்கின்றார். கிறிஸ்மஸ் விழாவில் கடவுளே மனிதனாய்ப் பிறந்து மனித பிறவியின் மாண்பை உனர்த்துகின்றார். இன்றைய விழாவில் அந்த மகிமை தம் உச்சத்தைத் தொட்டு நிற்கின்றது. இயேசு மண்ணில் பிறப்பதன் நோக்கமே மானிடரை விண்ணுக்கு அழைத்துச் செல்வதற்காகத்தான். இறை மதிப்பீடுகளால் நிறைக்கப்பட்ட அவர் இறைவனிடம் திருப்பிச் செல்வது நியாயமானதே. இன்றைய விழா இயேசுவின் பணி வாழ்வின் முடிவல்ல, மாறாக உலகப் பணியின் துவக்கம். ஏனெனில் லூக்காவின் இரண்டாவது நூலாகிய திருத்தூதர் பணி இயேசுவின் விண்ணேற்ப்போடு துவங்குகின்றது. அதுவே உலகின் கடையெல்லைவரை நற்செய்தி அறிவிப்பதன் தொடக்கமுமாகும் (திப 1:8). உயர்த்தப்பட்டவர் கடவுளின் வலப்பக்கம் அமர்கின்றார். கிறிஸ்து உலக சக்திகள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டமையால் கிறிஸ்து வழியாகச் செயல்படும் கடவுளின் திட்டத்திற்கு தடைபோடுவோர் (இப்போதும் வருங்காலத்திலும்) எவருமில்லை (எபே 1:21) என்று பவுல் எடுத்துரைக்கின்றார்.

இயேசு விண்ணகம் சென்றபோது திருத்தூதர்கள் யாரும் கலக்கமடையவில்லை (சிலுவையில் கொல்லப்பட்டபோது கலங்கினர்). அவர்கள் மகிழ்வுடன் புறப்பட்டுச் சென்றனர். ‘உடனிருக்கும் கடவுள்’ மனிதப் பருப்பொருள்களுக்கு அப்பாற்ப்பட்டவர் என்பதை உயிர்த்த இயேசு உடனிருந்த நாற்பது நாள்களாக திருத்தூதர்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். கடவுளின் உடனிருப்பு யாருக்கும் எப்போதும் குறைவுபடுவதில்லை (மத் 28:20) என்பதை இயேசுவே உறுதிப்படுத்துகின்றார். இதையே தூய அகுஸ்தினார், -கிறிஸ்து வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடலின் உறுப்புகளாகிய நாம் படும் துன்பங்களில் உடனிருக்கின்றார். அவரின் உடனிருப்பு, சவுலே சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் (திப 9:4). நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் (மத் 25:35) என்ற போதும் வெளிப்பட்டன. வானத்தில் இருந்தாலும் அவர் நம்முடன் இருக்கின்றார். அவரது ஆற்றல் இறைத்தன்மை அன்பின் மூலம் இங்குள்ளார். அவர் பூமியில் கொண்டிருந்த இறைதன்மையோடு நாம் விண்ணகத்தில் இருக்க இயலாது. ஆனால் நாம் அன்பில் அவருடன் இணைந்திருப்போம் - என்று எழுதுகின்றார்.

ஒளியூட்டப்பட வேண்டிய அகக்கண்கள்

பல உண்மைகள் சாதாரண மனிதக் கண்களுக்குப் புலப்படுவதில்லை. சூரிய சக்தியைப் பற்றி நாம் இக்காலங்களில் அடிக்கடி பேசுகின்றோம். இந்த சக்தி எல்லையற்றது, சமத்துவமானது, சுற்றுச்சூழலைப் பாதிக்காதது, பாதுகாப்பானது, எல்லோருக்கும் பொதுவானது, சுலபமாகக் கிடைக்கக்கூடியது, இலவசமாகக் கிடைக்கக் கூடியது…. ஆனால் விரும்புவோரால் மட்டுமே அதை அறுவடை செய்ய இயலும். அதுபோல் நம்பிக்கையோடு நோக்குவோருக்கே பல உண்மைகள் அகப்படும். கடவுளின் செயலாற்றல் கிறிஸ்து வழியாக மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (எபே 1:20). அது சூரியனின் ஒளிபோல் அண்ட சராசரங்களை நிறைத்து ஒளி தருவதோடு, பல பயிர்களுக்குப் பச்சயமும் தருகின்றது. விதை மரமாவதை விதை பார்ப்பதில்லை. பூ காயாகிப் பழமாவது அதற்குத் தெரியாது. இலைகள் உரமாகி மரங்களுக்கு உயிர்சக்தியாவது அவைகளுக்குப் புரியாது. அதுபோல் மனிதன் கடவுளாகப் போவது அவனுக்குப் புரியவில்லை. வானத்தைச் சேர்ந்தவருக்குத்தான் வானத்தைப் பற்றித் தெரியும். இயேசு தமக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படுத்துவதோடு அதை செயலில் காட்டுகின்றார். உள்ளாந்தமுறையில் பார்ப்போர், கேட்போர், உணர்வோர் அதைக் கண்டு அனுபவிப்பர்.

நற்செய்தி அறிவித்தல்

 இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியின் வருகை சீடர்கள் நற்செய்திப் பணியாற்ற செல்லுதல் போன்ற அனைத்தும் ஒன்று மற்றதைச் சார்ந்து நிற்கும் தொடர் நிகழ்வுகள். கடவுளைப் பற்றிய முழு அறிவையும் தரும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளும்வரை (எபே 1:17) அவர்கள் எருசமேலில் தங்கியிருப்பர். அவர் தரும் ஆற்றலால் அனைத்தும் அவர்களுக்குக் கைகூடும். லூக்கா நற்செய்தி முழுவதும் இயேசுவுக்கு முக்கியமான தருணங்களில் வழிநடத்தும் தூய ஆவியானவர், திருத்தூதர் பணியில் நற்செய்தி அறிவிப்பின் முகவர் பொறுப்பேற்கின்றார். போராட்டங்கள் நிறைந்திருந்த காலத்தில் திருத்தூதர்களுக்கு ஊக்கமும் உறுதியும் தந்து அவர்களை வழிநடத்துவது தூய ஆவியே என்ற உண்மைக்கு திருத்தூதர் பணி சான்று பகர்கின்றது. மனித ஆற்றல் வாழ்வுத் தோல்விகளின்போது தொய்வடைந்துவிடும். ஆனால் எல்லையில்லாப் பேராற்றல் எல்லைகளைக் கடந்த ஒருவரிடமிருந்தே வரும். ஆவியின் ஆற்றலைப் பெற்றபின் திருத்தூதர்கள் அதிசயங்களை அணுபவித்தனர். நற்செய்தி அறிவிப்பது கட்டாயக் கடமையாகும் (1 கொரி 9:16). நாம் இறந்த கடவுளைப் பற்றிப் போதிக்கப் போவதில்லை. வாழும் தொடர்ந்து வாழ வைக்கும் கடவுளுக்கு சாட்சியம் பகர வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் வரும் ‘சாட்சிகள்’ என்ற சொல் பொருள் பொதிந்தது. அவர்கள் பார்த்தவை கேட்டவை தொட்டு உணர்ந்தவை அனுபவித்து அறிந்தவை, போன்றவற்றை தம் வாழ்வின் மூலம் காட்சிப்படுத்த வேண்டும். இயேசு கற்பித்த மதிப்பீடுகள் அனைத்தும் நம் அனைவரின் கண்முன் இருக்கின்றன. அவை இயேசு நம்முடன் இன்னும் வாழ்வதை நினைவூட்டுகின்றன. அவை இயேசுவின் பிரதிநிதியாக நம்முள் உள்ளன. அவற்றைக் கண்டுகொள்ளாமல் வாழ இயலாது. அவற்றை நமது வாழ்வில் பின்பற்றுவதோடு, பிறருக்கும் அறிவிக்கப்பட வேண்டும்.

விண்ணைத்தேடி வருவாயா?!

வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கும் திருத்தூதர்களிடம் அவர் மீண்டும் வருவார் என்ற நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. இந்த விழா நம்மை வானத்தைப் பார்த்து வாழ, வானத்திற்குப் பயந்து வாழ அழைக்கின்றது. மண்ணிலிருந்து மேலெழும்ப விதை, செடி, மரம், பறவை, துடிக்கின்றனர். சில மணி நேரங்கள் வாழும் சிற்றீசல்கூட தீபங்களைத் தேடுகின்றது. உயர்ந்தவற்றைத் தேடும் அவையே நமது வாழ்வின் வழியாகும். இயேசு தம்மையே சிலுவையிலும் விண்ணகத்திலும் உயர்த்தும் வேளையில் பலரின் வாழ்வு உயர்ந்திருக்கின்றது. அதைப் பின்பற்றி பிறருக்காக தம்மை உடைத்துக் கொடுப்போர் அனைவரும் உயர்ந்த மனிதர்கள் மனிதர்களுள் மாணிக்கங்கள். கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பசியோடு வாழும், வழி நடக்கும் பலருக்கு உணவு கொடுப்பது அவர்களுக்கு உயிர்கொடுப்பதாகும்.

Comment