No icon

Dr.Simon Hercules R.I.P

மீண்டும் நல்லடக்கம் செய்வதற்கான திருமதி ஆனந்தி சைமன் கோரிக்கை நிராகரிப்பு (நடந்தது என்ன?)

கொரோனோ நோய்த்தொற்றின் காரணமாக தம் உயிரைத் தியாகம் செய்த மருத்துவர் திரு.சைமன் ஹெர்குலஸ் அவர்களின் குடும்பத்தாரின் கோரிக்கையை நிராகரித்த சென்னை மாநகராட்சி 

ஏப்ரல் 25. 2020. சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்  வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை (செ.வெ.எண் 108)

மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் வயது (வயது 55) என்பவர் நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 04. 2020 அன்று காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, ஏப்ரல் 07, 2020 அன்று அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, சிறப்பான தொடர் சிகிச்சைக்குப் பின்னர், சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் 19, 2020 அன்று இயற்கை எய்தினார்.  அன்று மாலை ஆறுமணியளவில் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் மரணமடைந்ததாக, மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மரணமடைந்த மருத்துவரின் உடலை நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, அவரது மனைவி திருமதி.ஆனந்தி சைமன் அவர்களிடம் தெரிவித்தபோது, அவர் தங்கள் குடும்பத்திற்கு கீழ்பாக்கம் செமட்ரீஸ் போர்டு என்ற தனியார் கல்லறை இடத்தில் இடக்கம் செய்ய இடம் உள்ளதாகவும், தன்னுடைய கணவர் உடலை செமட்ரீஸ் போர்டு நிர்வாகத்திடம் மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களாலும் இறந்தவரின் குடும்பத்தினராலும் தெரிவிக்கப்பட்டு, கல்லறை நிர்வாகத்தின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.  கல்லறை நிர்வாகம் இந்த கல்லறையில் மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு அடக்கம் செய்ய இயலாது என்று தெரிவித்தது. உடனடியாக இந்த தகவல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் குடும்பத்தினர் இன்று இரவிற்குள் மருத்துவரின் உடலை வேறு ஏதேனும் மயான பூமியில் நல்லடக்கம் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

கீழ்பாக்கம் மாநகராட்சி கிறிஸ்தவ கல்லறையில் எதிர்ப்பு

மத்திய வட்டார துணை ஆணையாளர் மற்றும் அண்ணாநகர் மண்டல அலுவலர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கீழ் பாக்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சியால் பராமரிக்கப்படும் கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்ய அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் ஏப்ரல் 19 அன்று இரவு பத்து மணி அளவில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் இது தொடர்பான தகவல்கள் கீழ்பாக்கம் சரகம் காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு இரவு 8.45 மணிக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு கோரப்பட்டது. அதன்படி கீழ்பாக்கம் சரக காவல் துணை ஆணையாளர் அவர்கள் தலைமையிலான குழுவினரால் பாதுகாப்பு அவ்விடத்தில் வழங்கப்பட்டது.  மரணமடைந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யத் தேவையான பணிகள் தொடங்கிய நிலையில் அந்தப் பகுதியைச் சார்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து கொரோனா நோய்த்தொற்று பாதித்த நபரின் உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் அண்ணாநகர் சரக காவல் துணை ஆணையாளர் அவர்களும் கீழ்பாக்கம் சரக துணை ஆணையாளர் அவர்களும் மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்வதால் மருத்துவ ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் இல்லை என எடுத்து கூறியும் அதனை பொதுமக்கள் ஏற்கவில்லை.

வேலங்காடு மயான பூமியில் ஏற்பாடும்  தாக்குதலும்

மேற்கண்ட சூழ்நிலையின் காரணமாக, காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் மற்றும் அண்ணாநகர் மண்டல அலுவலர் அவர்களின் ஆலோசனையின் பேரில், மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தாரின் சம்மதத்துடன், வார்டு  101-ல் அமைந்துள்ள வேலங்காடு மயான பூமியில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அண்ணநகர் சரக காவல் உதவி ஆணையாளர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, மரணமடைந்தவரின் உடலை வேலங்காடு மயான பூமிக்கு கொண்டு வர, சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மரணமடைந்த மருத்துவரின் உடல் ஆம்புலன்ஸ் சுமார் நள்ளிரவு 12 மணியளவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மயான பூமிக்கு கொண்டுவரப்பட்டது.  மரணமடைந்த மருத்துவரின் மனைவி திருமதி.ஆனந்தி சைமன் அவரது மகன் ஆடன் மற்றும் மரணமடைந்த மருத்துவரின் இரு சக மருத்துவர்கள் தனித்தனியே வாகனத்தில் மயானபூமி வந்தடைந்தனர். மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தார் அனுமதிக்கப்பட்ட தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து மருத்துவர் உடலுக்கு அவர்களின் மதம் சார்ந்த சடங்குகளைச் செய்து முடித்தனர்.  எதிர்பாராத வேளையில் மயானபூமிக்கு வந்த சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நபர்கள் கூடி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கியும் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சேதப்படுத்தினர்.  இந்த அசாதாரண சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மரணமடைந்த மருத்துவரின் உடல் நியு ஆவடி சாலையில் அமைந்துள்ள நியு ஹோப் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலங்காடு மயான பூமியில் நல்லடக்கம்

காவல் துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின், காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படியும் மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடனும் இறந்தவரின் உடல் வேலங்காடு மயான பூமியில் நல்லடக்கம் செய்ய திரும்ப கொண்டுவரப்பட்டது.  மரணமடைந்த மருத்துவரின் சக மருத்துவர் திரு.பிரதீப் அவர்கள் முன்னிலையில், மரணமடைந்த மருத்துவரின் உடல் முழு மரியாதையுடனும் மத சடங்குகளின்படியும் கொரோனோ நோய் தொற்று பாதித்து மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கான சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படியும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

திருமதி.ஆனந்தி சைமன் அவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

திருமதி.ஆனந்தி சைமன் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது கணவரின் உடலை மீண்டும் கீழ்பாக்கம் செமட்ரீஸ் போர்டு கல்லறையில் அடக்கம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஏப்ரல் 22,2020 அன்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டது. அவ்வறிக்கையின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டபின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஓர் இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளதால், திருமதி ஆனந்தி சைமன் அவர்களது கோரிக்கையை ஏற்பது சாத்தியம் இல்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

(செய்தி பகிர்வு : நம்வாழ்வு வார இதழ்-www.namvazhvu.in)

Comment