No icon

Good Friday

சிறைக்கைதிகள் உருவாக்கியுள்ள சிலுவைப்பாதை

"29 ஆண்டுகள் சிறைவாழ்வுக்குப் பின், இயேசுவின் பாடுகளை வாசித்த வேளையில், பரபா, பேதுரு, யூதாசு ஆகிய மூவரும் இணைந்த ஓர் உருவமாக என்னைக் காண்கிறேன்" என்று, சிறைக்கைதி ஒருவர் தன் வாழ்வைக்குறித்து பகிர்ந்துள்ள சிந்தனைகள், ஏப்ரல் 10, புனித வெள்ளியன்று, வத்திக்கானில் நடைபெறும் சிலுவைப்பாதையில் இடம்பெற்றுள்ளன.

புனித வெள்ளி இரவு 9 மணிக்கு, (இந்திய நேரம் அதிகாலை 12.30 மணிக்கு)   வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் முன்புறம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டு, நேரடி ஒளிபரப்பாகும் சிலுவைப்பாதையில் பயன்படுத்தப்படும் சிந்தனைகளை, இவ்வாண்டு, பதுவை நகரில் உள்ள சிறைக்கைதிகளுக்கு ஆன்மீக வழிகாட்டியான அருள்பணி மார்கோ பொஸ்ஸா அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.

இயேசுவின் பாடுகளை வாசித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஐந்து சிறைக்கைதிகள் கூறியுள்ள கருத்துக்களுடன், சிறைக்காவலர் ஒருவர், பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஓர் அருள்பணியாளர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு மகனின் தாய் ஆகியோர், இந்தச் சிலுவைப்பாதையில் தங்கள் கருத்துக்களைப் பகிந்துள்ளனர்.

வத்திக்கான் நூல் வெளியீட்டகம், இந்த சிலுவைப்பாதையை, ஆங்கிலம் உட்பட, சில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து, தன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதென்றும், இந்த வெளியீட்டகத்தின் வலைத்தள முகவரி வழியே, (www.vaticannews.va/it/lev.html) அனைவரும், இதனை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment