No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

அற்புதச் சிலுவையின் கீழ், புனித வாரக் கொண்டாட்டங்கள்

தொற்றுக்கிருமி உயிர்க் கொல்லி நோய், பல உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்ற இந்தத் துன்ப நேரத்தில், புனித வாரக் கொண்டாட்டங்களை உரோம் நகரின் புனித மர்ச்செல்லோ ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அற்புதச் சிலுவையின் கீழ், புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்ற உள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்திருக்கிறார்.

மார்ச் 15 ஆம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோமை நகரின் புனித மர்ச்செல்லோ ஆலயத்தில் உள்ள அற்புதச் சிலுவையிடம்  இந்தக் கொள்ளை நோயிலிருந்து இத்தாலி நாட்டையும் உலக நாடுகளையும் காப்பாற்ற வேண்டி செபித்ததும்,  புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அச்சிலுவையைக் கொணர்ந்து அங்கே வைத்து மார்ச் 27 ஆம் தேதியன்று மழையில் நனைந்துவாறே வந்து, உலக மக்கள் நலனுக்காக இந்த அற்புத சிலுவை முன் மனமுருகச் செபித்ததும் நாம் அறிந்ததே.

உரோமை நகரில் உள்ள பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான புனித மர்ச்செல்லோ ஆலயத்தில் 15வது நூற்றாண்டில் செய்யப்பட்ட மரத்தாலான, அழகிய திருச்சிலுவையான இது, இவ்வாலயம் 1519ம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்து முழு ஆலயமும் சாம்பலானபோதிலும், இந்த சிலுவை மட்டும் அப்படியே எந்தவித பாதிப்பும் அடையாமல் இருந்ததும், அதன் அடியில் ஒரு சிறிய எண்ணெய் விளக்கு எறிந்து கொண்டிருந்தது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய கடந்த கால விசுவாச வரலாறு ஆகும். 

இது நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா தொற்றுக்கிருமி போன்ற மிகப் பெரிய கொள்ளை நோய் உரோமை நகர் எங்கும் பரவி, பலர் இறந்து. உரோமை நகரமே துன்பத்தில் மூழ்கி இருந்த நேரத்தில் திருத்தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் புனித மர்ச்செல்லோ ஆலயத்தின் அதிசயச் சிலுவையானது 1522ம் ஆண்டு ஆகஸ்டு 4 முதல் 20ம் தேதி வரை, ஏறத்தாழ 16 நாட்கள் உரோமை நகரத்தின் முக்கியமான வீதிகள் வழியாக புனித பேதுரு ஆலயம் நோக்கிப் பவனியாகக் கொண்டுசெல்லப்பட்ட வேளையில். இந்த அதிசயச் சிலுவை கடக்கின்றபொழுது அதைப் பார்த்த நொடியே மக்கள் குணம்பெற்றதாக வரலாறு எடுத்துரைக்கின்றது.

கி.பி 1600 ஆம் ஆண்டிலிருந்து, “புனித ஆண்டு” அல்லது யூபிலி ஆண்டு கொண்டாடப்படும் ஒவ்வொரு முறையும் இந்த அதிசயச் சிலுவை, புனித பேதுரு பெருங்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்களுடைய ஆராதனைக்காக வைக்கப்படுவது இன்றும் வழக்கமாக இருக்கின்றது.

1522ஆம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோய் போன்றே இன்றும் இந்த கோவிட்-19 நோயால் துன்புற்றிருக்கும் இந்த உலகை காப்பாற்ற வேண்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வார பாஸ்கா கால கொண்டாட்டங்களை, இந்த அதிசய சிலுவையின் கீழ் சிறப்பித்து வருகிறார்.
 

Comment