No icon

மன்றாடி மகிழ்ந்திடுவோம் - 50

எலியா

“எது உங்கள் முகவரி ” (1 அர 17:1)

மாதாந்திர பத்திரிகை, அஞ்சல் அலுவலகம் வழியாகத் திரும்ப வரும்பொழுது, சில காரணங்களை அஞ்சல் அலுவலர் குறிப்பிட்டிருப்பார்.

மறுக்கப்பட்டது; நபர் இறந்துவிட்டார்; முகவரி முழுமையாக இல்லை; இந்த முகவரியில் இந்த நபர் இல்லை-இடம் மாறி சென்றுவிட்டார்.

பத்திரிகை சென்றடைய வேண்டுமெனில், அந்நபர், பத்திரிகையை விரும்புபவராக உயிருடன் இருப்பவராக, முகவரி பிழையின்றி, முழுமையாக காணப்பட வேண்டும்.

கடவுளோடு தோழமை கொண்டவர்கள் கடவுளுக்கும், இவருக்கும் நெருங்கிய தோழமை உண்டு என்று சொல்லும் அளவுக்கு, மறைநூலில் சிலரைக் காண்கிறோம்.

கடவுளின் சாயலிலும், உருவிலும் உண்டாக்கப்பட்ட ஆதாம் - கடவுளின் மகன் என்று அழைக்கப்பட்டார் (லூக் 3:38).

காயினுடைய பலியைவிட, மேலான பலியை ஆபேல் கடவுளுக்கு செலுத்தி, நேர்மையானவர் என்று கடவுளின் நற்சான்று பெற்றார் (எபி 11:4).

வாழ்நாளெல்லாம் கடவுளோடு நடந்தபடியினால், ஏனோக்கு கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றார் (தொநூ 5:24, எபி 11:5).

தம் காலத்தவருள் நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்து, கண்ணுக்குப் புலப்படாதவை குறித்து கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையை அமைத்ததால், நோவா இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப் பேறு பெற்றார் ( தொநூ 6:9, எபி 11:7).

தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும், புறப்பட்டு சென்றதாலும், வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என்று கருதியதாலும் தன் ஒரே அன்பு மகனையே பலியிடும் அளவுக்கு கடவுளின் குரலுக்கு செவி கொடுத்தது போன்ற காரணங்களாலும், ஆபிரகாம் கடவுளின் நண்பர் என்று அழைக்கப்பட்டார் (எபி.11:8-11, தொநூ 22:18, 2குறி 20:7).

கடவுளின் தூதரோடு போரிட்டு வென்றதால், அதாவது, தான் ஏமாற்றுக்காரன்தான் (யாக்கோபு) என்பதை முழுமையாக ஒப்புக்கொண்டு, தன்னை முற்றிலும் வெறுமையாக்கி மன்றாடியதால், இஸ்ரயேல் (வெற்றி பெற்றவன்) என்று பெயர் பெற்றார் (தொநூ 32: 27, 28).

ஒரு காலத்தில் கொலைக்காரனாக, கோபக்காரனாக இருந்தாலும், பின்னாளில் பாவத்தில் சிறிது காலம் இன்புறுவதைவிட, கடவுளுடைய  மக்களோடு சேர்ந்து, துன்புறுவதையே தேர்ந்து கொண்டதால், “இவ்வுலகின் அனைத்து மாந்தரிலும், மோசே சாந்தமிகு மானிடர் என்றும், என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன் என்றும் மோசே சான்று பெற்றார் (விப 2:11,12; எபி.11:25; எண்.12:3,7).

ஆண்டவருக்கு எதிராகப் பெரும் பாவங்கள் புரிந்து, கடவுளுக்கு அவப்பெயரை உண்டாக்கிவிட்டாலும், நாத்தான் இறைவாக்கினர் வழியாக உணர்த்திக்காட்டப்பட்டபொழுது, பெரும்பாவி நான், உம்மிடமிருந்து என்னைப் பிரித்துவிடாதேயும், என்று மெய்யாகவே மன்றாடியதால், என் இதயத்துக்கு உகந்தவன் என்று கடவுளின் அற்புத சான்றை தாவீது பெற்றார் (2 சாமு 11,12; திப 51; திப 13:22).

‘கடவுளைப் பணியும் நான்; கடவுளின் திருமுன் நிற்பவன் நான்’ என்று தன்னைக் குறித்து, ஆகாய் அரசன் முன் தைரியமாகச் சொல்லி, வானத்தை அடைத்தவர் எலியா இறைவாக்கினர் (1 அர 17:1).

‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்று தம் இயேசுவைப் பற்றி கடவுள் சான்று பகர்ந்தார் (மத் 3:17; 17:5).

“மனிதனாய்ப் பிறந்தவர்களுள், திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்று இயேசுவின் சான்று கிடைத்தது (மத். 11:11).

தாம் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களைப் பார்த்து, இனி நீங்கள் பணியாளர் அல்ல; என் நண்பர்கள் என்றார் (யோவா 15:15).

நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவி என்று பவுலைக் குறித்து இயேசு சொன்னார் (திப 9:15).

வாலிபர்களுக்கு நடந்த தியானத்தில், இப்பொழுது, உங்களது முகவரியை உங்கள் அகத்தின் அழகை, அகத்தோடு ஆண்டவருக்குள்ள தொடர்பை எழுதுங்கள் என்றபோது, அநேகரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நான் சினிமாவுக்கும், அலைபேசிக்கும், வீண் பேச்சுக்கும், விளையாட்டிற்கும், சோம்பலுக்கும், களவுக்கும், பொய்க்கும், விபச்சாரத்திற்கும், கீழ்ப்படியாமைக்கும்..... அடிமைப்பட்டுக் கிடக்கிறேனே - என்ன எழுதிவிட முடியும் என்பதே அவர்களது போராட்டமாக இருந்தது.

பழைய ஏற்பாட்டு சான்றாளர்கள், பல சோதனைகளை வென்றதால்தானே நற்சான்று பெற்றார்கள்.

ஒவ்வொரு புனிதருக்கும் கடந்த காலம் உண்டு; ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு.

 

Comment