No icon

எதிர்ப்புக்கு மத்தியில் மங்களூருவில் பெயரிடப்பட்டுள்ளது

கர்நாடகா மாநிலத்தின் மங்களூருவில் அமைந்துள்ள ஒரு பூங்காவிற்கு, அநீதியாய் கைதுசெய்யப்பட்டு, மும்பையில் தடுப்புக்காவலில் கொலைசெய்யப்பட்ட, சமூகப் போராளி இயேசு சபையைச் சேர்ந்த அருள்பணி. ஸ்டான் சுவாமி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மங்களூருவில் இயேசு சபையினர் நடத்தும் புனித அலாய்சியஸ் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு, "ஸ்டான் சுவாமி அமைதிப் பூங்கா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கல்லூரியின் அமைப்பில் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கத்தில், அக்கல்லூரியின் வளாகத்தில் பூங்கா அமைப்பதற்கு, மனித உரிமை ஆர்வலரான அருள்பணி. ஸ்டான் சுவாமி அவர்களின் வாழ்வு தூண்டுதலாக இருந்தது என்று, இயேசு சபையினர் கூறியுள்ளனர்.

84 வயது நிரம்பியிருந்த அருள்பணி. ஸ்டான் சுவாமி அவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மற்றும், தலித் மக்களின் உரிமைகள் காக்கப்படுவதற்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தவர். இவர், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டு, மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். இவர், இவ்வாண்டு ஜூலை 5 ஆம் தேதி தடுப்புக்காவலில், மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது வயது மற்றும் நோயைக் காரணம் காட்டி பலமுறை விண்ணப்பிக்கப்பட்ட பிணையல் மனுவையும் நீதிமன்றம் புறக்கணித்தது.

பூங்காவிற்கு அருள்பணி. ஸ்டான் சுவாமியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு, பிஜேபி கட்சியின் மாணவர் பிரிவு உட்பட, இந்து தீவிரவாதக் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்து, உள்ளூர் காவல்துறைக்கு மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையே, தன் தீர்மானம் பற்றி உறுதியாக இருக்கும், திருஅவை மற்றும் இயேசு சபை அருள்பணியாளர்கள், மங்களூரு புனித அலாய்சியஸ் கல்லூரி, இனம், மதம், மொழி, சமூகநிலை போன்ற எந்தவிதப் பாகுபாடுகளுமின்றி, கடந்த 140 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றது என்று கூறியுள்ளனர்.

தமிழக இயேசு சபையினரும் அவர்கள்தம் கல்வி நிறுவனங்களும் தமிழரான தந்தை ஸ்டான் சுவாமி நினைவாக ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்தால் நன்றாக இருக்கும்.

Comment