யாவும் செய்வார் இயேசு!
- Author ஆ. இராமலிங்கம் --
- Wednesday, 17 Jul, 2019
கற்பாறை மீதினிலும் பூப்பூக்கச் செய்திடுவார்!
கற்காத வர்களையும் கைதூக்கி விட்டிடுவார்!
முட்காட்டைக் கூடஅவர் முழுச்சோலை ஆக்கிடுவார்
அற்புதமாய் மனிதர்களை அருள்தந்து காத்திடுவார்!
பொல்லாத மனிதரையும் நல்லாராய் மாற்றிடுவார்!
இல்லாத வர்களுக்கு இசைவாழ்வு தந்திடுவார்!
நில்லாத பொன்பொருளை நிலைநிறுத்திக் காட்டிடுவார்!
எல்லாமும் ஆனவரை எப்போதும் தொழுதிடுவோம்!
பிறையான மனிதரையும் நிறைநிலவாய் ஆக்கிடுவார்!
நிறைவான பொருளீந்து முறையான வாழ்வளிப்பார்!
சிறையான கவலைகளை சீக்கிரத்தில் உடைத்திடுவார்!
மறைஇயேசு அவரினையே மண்டியிட்டுத் தொழுதிடுவோம்!
நெஞ்சடைத்த நோயினையும் நீக்கிக் குணமளிப்பார்!
பஞ்சடைந்த கண்களுக்கும் பார்வையினைப் பரிசளிப்பார்!
வெஞ்சாமரே வந்தாலும் விலக்கிநமைக் காத்திடுவார்!
தஞ்சமென வந்தவரைத் தாய்போல அரவணைப்பார்!
பிள்ளைகளும் பேரர்களும் பெருகிடவே அருளிடுவார்!
கொள்ளைபோன பொருளையே கொண்டுவந்து சேர்த்திடுவார்!
வெள்ளைமனக் காரருக்கு வேதனைகள் தீர்த்திடுவார்!
பிள்ளையெனப் பிறந்திட்ட இயேசுவினைப் போற்றிடுவோம்!
Comment