No icon

அருள்முனைவர்  யேசு கருணாநிதி

மூவொரு இறைவன் பெருவிழா

நீமொ 8:22-31, உரோ 5:1-5, யோவா 16:12-15

ஏன் கடவுள்? என் கடவுள்!

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போதும், நம் நண்பர்களைச் சந்திக்கும்போதும், ‘எப்படி இருக்குற?’ என்று கேட்கிறோம். என்றாவது ஒருநாள் அவர்களிடம், ‘ஏன் இருக்குற?’ என்று கேட்டுப்பார்த்தால் அது விபரீதத்தில் போய் முடியும். இல்லையா? ஓர் ஆய்வகத்தில் இருக்கிறோம். தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கிறோம். ‘தண்ணீர் உருவாவது எப்படி?’ என்று கேட்டால், ‘ஒரு பகுதி ஆக்ஸிஜனும், இரு பகுதி ஹைட்ரஜனும் இணையும்போது தண்ணீர் உருவாகிறது’ என்று பதில் சொல்லலாம். ஆனால், இதையே கொஞ்சம் மாற்றி, ‘தண்ணீர் ஏன் உருவாகிறது?’ என்று கேட்டால் நமக்குப் பதில் தெரியாது. ஆக, மனிதர்கள் இயற்பியல்சார் உலகில், ‘எப்படி?’ என்ற கேள்விக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, ‘ஏன்?’ என்ற கேள்விக்கு அல்ல.

ஆனால், கடவுள் மற்றும் இறைசார் உலகு இதற்கு எதிர்மாறானது. இங்கே, ‘ஏன்?’ என்ற கேள்விக்குத்தான் விடையே தவிர, ‘எப்படி?’ என்ற கேள்விக்கு விடையில்லை. ‘ஏன் விண்ணேற்றம்?’ என்று கேட்கலாம். ‘எப்படி விண்ணேற்றம்?’ என்று கேட்க முடியாது. ‘ஏன் நற்கருணை?’ என்று கேட்கலாம். ‘எப்படி நற்கருணை?’ என்று கேட்க முடியாது. ‘ஏன் மூவொரு இறைவன்?’ என்று கேட்கலாம். ‘எப்படி மூவொரு இறைவன்?’ என்று கேட்க முடியாது.

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

“இவ்வாறு உண்மையான, நிலையான

கடவுள் தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது

வகையில் தனித்தன்மையையும் இறைஇயல்பில் ஒருமையையும்

மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்”

- என்று பாடும் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை ஓரளவுக்கு மூவொரு இறைவன் என்னும் மறையுண்மையை விளக்கினாலும் நம்மால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

நான் புனேயில் இறையியல் பயின்றபோது, மூவொரு இறைவன் பற்றி ஓர் ஆயர் வகுப்பெடுக்க, அங்கிருந்த மாணவர் ஒருவர், ‘ஆயரே! மூவொரு இறைவன் பற்றித்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியாதே. அப்படி இருக்க அவர் மூன்று பேராக இருந்தால் என்ன? நான்கு பேராக இருந்தால் என்ன? வாட் டஸ் இட் மேட்டர்?’ என்று கேட்டார்.

‘வாட் டஸ் இட் மேட்டர்?’ என்று நம் மூளை ஒதுங்கிக்கொள்ளவே நினைக்கிறது.

‘தந்தை - மகன் - தூய ஆவியார்’ என்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் இன்றைய நாள்களில் ஏற்புடையவை அல்ல; இவ்வார்த்தைகள் கடவுள் ஆண்பாலைச் சார்ந்தவர் என்று உறுதியிட்டுக் கூறுகின்றன. கடவுளை எப்படி பாலினத்திற்குள் அடக்க முடியும்?

மேலும், ‘மூவொரு இறைவன்’ என்பது ‘கடவுளைப் புரிந்து கொள்வதற்கான’ ஓர் ‘ஒர்க்கிங் மாடல்’ அவ்வளவுதான். நாம் பள்ளியில் படிக்கும்போது, மிக்ஸி போன்ற ஒரு மாடல் செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு சிறிய மோட்டார், ஒரு சிறிய கத்தி என்று வடிவமைக்கிறோம். இதை ‘ஒர்க்கிங் மாடல்’ என்கிறோம். இது என்னதான் அழகாக, நேர்த்தியாக இருந்தாலும், இந்த ‘மாடலை’ வைத்து நாம் சட்னி அரைக்க முடியுமா? அல்லது ‘மூவொரு இறைவனின் தந்தை மகனை அன்பு செய்கிறார்’ எனச் சொல்கிறோம். ஆனால், வீட்டில் என் அப்பா என்னை அன்பு செய்யவே இல்லை என்றால், கண்டிப்பாக என்னால் தந்தையையும் அன்பு செய்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது.

கிளாவர் மலர், தண்ணீர்-பனிக்கட்டி-நீராவி, அப்பா-அம்மா-மகன், வெப்பம்-ஒளி-கதிர்வீச்சு என எவ்வளவோ உருவகங்களைப் பயன்படுத்தினாலும், திருவிவிலியத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினாலும் நம்மால் இம்மறைபொருளைப் புரிந்துகொள்ளவே முடியாது.

ஆக, ‘எப்படி மூவொரு இறைவன்?’ என்று கேட்பதை விடுத்து, ‘ஏன் இறைவன்?’ அல்லது ‘ஏன் மூவொரு இறைவன்? என்று கேட்கலாம்.

இன்று கடவுள் நமக்குத் தேவையா? கடவுள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?

நாம் கடவுள் தேவையை மூன்று நிலைகளில் அல்லது வழிகளில் உணர்கின்றோம்: (அ) நம்முடைய வரையறை அனுபவம்: ‘என்னால் ஐம்பது கிலோதான் தூக்க முடியும்’ என வைத்துக்கொள்வோம். ஆனால், அறுபது கிலோ தூக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போது, நம் மனம் இயல்பாகவே கடவுளை நோக்கி எழும்புகிறது. என்னால் முடியாத ஒன்றைச் செய்ய நான் இறைவனின் துணையை நாடுகிறேன். (ஆ) தனிமை: விலங்குகள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை. அவை எதிரிகளைக் கண்டுதான் பயப்படுமே தவிர தனியாய் இருக்கப் பயப்படுவதில்லை. ஆனால், நாமோ எதிரிகளோடு விருந்துண்டு, பயணம் செய்து, வழி நடந்திருந்தாலும் மனதில் தனிமையாய் உணர்துண்டு. கடவுள் ஆதாமிடம் விரும்பாத உணர்வும் தனிமை தான். தனிமைக்குத் துணையாக ஏவாள் படைக்கப்பட்டாலும், முதற்பெற்றோரின் தனிமையைப் போக்குபவராக கடவுள் இருக்கிறார். (இ) நினைவு: கடவுள் பற்றிய உணர்வு நம்முடைய நினைவில் இருக்கிறது. இந்த நினைவு தனிநபர் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது ஒட்டுமொத்த குழும உணர்வாக இருக்கலாம். என்னுடைய அம்மாவும், அப்பாவும்  ‘கடவுள் என்றால் இது அல்லது இவர்’ என்று தங்கள் நினைவில் இருந்ததை எனக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் அதை ஒட்டுமொத்த குழும நினைவிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆக, நினைவு இருக்கும் வரை தான் கடவுள் இருப்பார். எனக்கு நினைவு போய்விட்டால் என்னைப் பற்றியே எனக்குத் தெரியாதபோது கடவுளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

ஆக, நம்முடைய வரையறை அனுபவம், தனிமை, நினைவு இம்மூன்றும் கடவுள் என்னும் தேவையை அறியவும், தேடவும் நம்மைத் தூண்டுகின்றன.

“கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்” (காண். யோவா 1:18) என யோவான் நற்செய்தியாளர் அறிக்கையிடுகின்றார். ஆக, காணக்கூடிய இயேசுவிடமிருந்து நாம் காணக்கூடாத இறைவனை நோக்கிச் செல்கின்றோம். இதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்று அவர் அவருடைய மனித தன்மையில் அறையப்பட்டாரா அல்லது இறைத்தன்மையில் அறையப்பட்டாரா? மனிதத் தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறைவன் இல்லையா? இறைத்தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறந்த அன்று மூவொரு இறைவனில் ஒரு ஆள் இறந்துவிட்டாரா? அல்லது மூவொரு இறைவனுமே இறந்துவிட்டாரா? இவை நம் கேள்விகள் அல்ல; வரலாற்றில் ஆரியஸ் போன்றவர்கள் கேட்ட கேள்விகளே.

ஆக, இயேசுவிடமிருந்து அல்லது இயேசு வழியாக மூவொரு இறைவனை அறிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறது. மூவொரு இறைவனின் மூன்று பண்புகளை இது பட்டியடுகிறது: (அ) இணைச்சார்புநிலை (ஆ) இணைவுநிலை மற்றும் (இ) உள்முகப்பார்வை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 8:22-31) ‘ஞானம் என்னும் பெண்’ தன் வரலாறு கூறுகிறாள். இந்த ஞானமே படைப்புச் செயலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒழுங்கற்ற உலகில் ஒழுங்கை ஏற்படுத்தும் நில வரைபடமாக இருக்கின்றாள் ஞானம். இவள் வழியாகவே கடவுள் உலகை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். நீதிமொழிகள் ஆசிரியர் படைப்புச் செயல் பல நிலைகளில் நடந்ததாக எழுதுகிறார். முதலில், ஞானம் படைக்கப்படுகிறாள். படைக்கப்பட்ட ஞானம் கடவுள் முன் அகமகிழ்கிறாள். மூவொரு இறைவனின் முதல் நபராக இருக்கின்ற தந்தையாகிய கடவுள் ஞானத்தைப் பெற்றெடுக்கிறார். இங்கே இரண்டும் வேறு வேறு அல்ல; உதாரணத்திற்கு, சிலந்தியின் வாயிலிருந்து வரும் ஒருவித பிசுபிசுப்பான பசை சிலந்திக் கூடாக மாறுகின்றது. சிலந்திக் கூட்டின் ஒரு நுனியைப் பிடித்து நாம் கவனமாகச் சென்றால் சிலந்தியை அடைந்து விடலாம். சிலந்தியும் பசையும் வேறு வேறு எனத் தோன்றினாலும், அவை வேறல்லவே. ஞானம் கடவுளின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது. தந்தை தன்னிடமிருந்தே ஞானத்தைப் படைத்தாலும், உலகைப் படைப்பதற்காக, அவர் ஞானத்தோடு இணைச்சார்புநிலையில் இருக்கின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 5:1-5) இரண்டாம் நபரான இயேசுவை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுளுடைய படைப்பு மனிதர்களின் பாவத்தால் பாழ்படுகிறது. இதனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது. முதற்பெற்றோரின் பாவத்திற்குப் பின் பயமும் குற்றவுணர்வும் மனிதர்களைத் தொற்றிக்கொள்ள, இறப்பும் அழிவும் தவிர்க்க முடியாதவையாகின்றன. கடவுள் தன் மக்களை மீட்டு மீண்டும் தன்னோடு இணைத்துக் கொண்டதை, பவுல், ‘ஏற்புடையவராதல்’ என்ற வார்த்தையால் விளக்குகின்றார். பவுலைப் பொருத்தவரை, “நாம் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்” (காண். உரோ 5:1). இயேசுவின் வழியாக நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றோம். இந்த எதிர்நோக்கு நாம் இவ்வுலக வாழ்வை இனிதே வாழத் துணைசெய்கிறது. இயேசு, பாவத்தால் ஏற்பட்ட பிரிவை அகற்றி, கடவுளுக்கும் - நமக்கும், நமக்கும் - மற்றவர்களுக்கும் இணைவுநிலையை உருவாக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 16:12-15) தமத்திருத்துவத்தின் மூன்றாம் நபரான தூய ஆவியாரை மையமாகக் கொண்டுள்ளது. தூய ஆவியார் திருத்தூதர்களை உண்மையை நோக்கி வழிநடத்துவதோடு, அவர் இயேசுவையும் மாட்சிப்படுத்துகிறார். ஆவியார் ஒரு மனிதரின் உள்இயல்பாக மாறி, உண்மையை நோக்கி அவருடைய இதயத்தைத் திருப்புகிறார். வெளிநோக்கிய ஒரு நபரை உள்நோக்குப் பார்வை கொள்ளச் செய்கிறார் தூய ஆவியார்.

மூவொரு இறைவன் இன்றைய நம் வாழ்வுக்குத் தரும் பாடங்கள் எவை?

அ. ஆதிக்கத்திலிருந்து இணைச்சார்பு நிலைக்கு

இன்று நம் உறவுகள், குடும்பம், சமூகம் சீக்கிரம் கசந்துபோவதற்குக் காரணம் ஆதிக்கம். சிறு வயதில் காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சோர்வு, விரக்தி போன்று இளையோரும் ஒருவர் மற்றவரை உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் பண்பு அதிகமாகிறது. மேலும், என் உறவுக்கு நானே பொறுப்பு, என் வாழ்வுக்கு நானே பொறுப்பு என்ற மனநிலையில், அதை உரிமையாக எடுத்துக்கொண்டு அடுத்தவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு வளர்கிறது. உறவு நிலையில் இருப்பவர் மற்றவர்மேல் உள்ள உரிமையை முன்னிறுத்தி, மற்றவரைத் தன்னுடைய உடைமை எனக் கருதும் போக்கும் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது. மூவொரு இறைவன் ஒருவர் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் அல்லர். மாறாக, ஒருவர் மற்றவரோடு இணைச்சார்புநிலை கொண்டிருப்பவர்.

ஆ. அந்நியப்படுத்துதலிலிருந்து இணைவிற்கு

பாவத்தால் மற்றவரிடமிருந்து அந்நியப்பட்டு நின்ற நம்மை ஒருவர் மற்றவரோடும், கடவுளோடும் இணைக்கிறார் இயேசு. அந்நியப்படுதல் என்பது விலகி நிற்றல். இன்று தகவல் தொழில்நுட்பம் நம்மை எந்த அளவிற்கு அருகில் கொண்டுவந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை. இணைவை நோக்கி நாம் செல்ல ஒருவர் மற்றவருக்கு அருகில் வந்து நிற்கும் நற்குணம் பெறுதல் வேண்டும்.

இ. வெளிப்புறப்பார்வையிலிருந்து உள்முகப்பார்வைக்கு

நாம் அனைவரும் வெளிப்புற தோற்றத்தில் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் நம்மிடையே குடிகொண்டிருக்கும் கடவுள் ஒருவர்தான். இதையே, ‘தத்வமசி’ என்கிறது உபநிடதம். நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, என்னில் இருக்கும் கடவுள் அவரில் இருக்கும் கடவுளைச் சந்திக்கிறார். ஆக, அடுத்தவரை வெளிப்புறத் தோற்றம் மற்றும் பின்புலம் கொண்டு மதிப்பிடாமல், அவரின் உள்முகத்தைக் கண்டு அன்பு செய்தல் நாம் கற்க வேண்டிய மூன்றாவது பாடம்.

இறுதியாக, மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் கடவுளுக்குத் தேவையோ, இல்லையோ, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவை. இம்மறைபொருளில் நாம் கடவுளை அல்ல; நம் ஒவ்வொருவரையுமே கண்டுகொள்கிறோம். இப்படிக் கண்டுகொள்ளும் நாம் பகிர்வு, சார்பு, சமத்துவம் என்று ஒருவர் மற்றவரை அரவணைக்கிறோம். ரொம்ப பிராக்டிகலாக சொல்ல வேண்டுமென்றால், மூவொரு இறைவனின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மேலோர்-கீழோர் என்று வேற்றுமை பாராட்டுவதில்லை, சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை, மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பதில்லை, தங்களுடைய சமய மரபுகளைப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை, தான் செய்வதே சரி என்று சொல்வதில்லை, யார்மேலும் வன்முறை பாராட்டுவதில்லை. அவர்கள் அனைவரையும் மதிப்பர், கனிவோடு நடத்துவர், தன்னைப் போல நடத்துவர்.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில், ‘நான்’ என்பதும், ‘எனது’ என்பதும் ஒன்றே. இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்துகொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும்

சமூகத்தையும் புரிந்துகொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்துகொள்கிறேன். ஏனெனில், ஏன் கடவுள்? என்ற கேள்வியிலிருந்து ‘என் கடவுள்’ யார் என்று நான் கண்டுகொள்கின்றேன்.

உங்களையும், என்னையும் போலவே மூவொரு இறைவனும் ஒரு மறைபொருள்!

Comment