No icon

நோத்ருதாம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட புனிதப் பொருள்கள்

ஏப்ரல் 15, திங்கள் மாலை, நோத்ரு தாம் பேராலயத்தில் எரிந்துகொண்டிருந்த தீ அணைக்கப்படுவதற்கு முன்பே, பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், அப்பேராலயம் மீண்டும், முன்னைவிட அழகாகக் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்தார். அப்படி அவர் அழைப்புவிடுத்தவுடனே, ஏப்ரல் 16, செவ்வாய் பிற்பகல் நேரத்திற்குள், 70 கோடி யூரோக்கள் நிதி உதவிக்கு உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஊசூஹ கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.  மேலும், இப்பேராலயத்தின் கட்டுமானப் பணிகள் மிக விரைவில் துவங்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டு, பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் போது, பேராலயம், ஓரளவாகிலும் மறுசீரமைக்கப்பட்டு, மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று தான் நம்புவதாக, மக்ரோன் அவர்கள் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள புகழ்ப்பெற்ற நோத்ருதாம் பேராலயம் தீக்கிரையாகியது அனைவரும் அறிந்ததே. இப்பேராலயத்தில் வரலாற்றுச் சிறப்பு
மிக்க பல்வேறு பொக்கிஷங்கள் உள்ளன. குறிப்பாக, இயேசு கிறிஸ்து தன் பாடுகளின்போது அணிந்திருந்ததாகச் சொல்லப்படும் முள்முடி, அவர் அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி, மற்றும் கிறிஸ்துவை சிலுவையில் பிணைத்த ஆணிகளில் ஒன்று, என, மிக முக்கியமான புனிதப்
பொருள்களுடன், பிரெஞ்சு நாட்டின் புனிதர்கள் பலரின் புனிதப் பொருள்களும், இந்தப் பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. 
தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தபோது தங்கள்
உயிரைப் பற்றி கவலைப்படாமல்
தீயின் நடுவே, தீயணைப்பு வீரர்கள்
மனிதச் சங்கிலியை உருவாக்கி,
அனைத்து புனிதப் பொருள்களை
யும் பாதுகாப்பான இடங்களுக்கு
அகற்றியுள்ளனர். கிறிஸ்துவின்
முள்முடி, மற்றும் பேராலயத்தின்
நற்கருணைப் பேழையில் வைக்கப்பட்டிருந்த நற்கருணை என அனைத்தையும்  தீயணைப்புப் படையினரின் ஆன்மிக வழிகாட்டி, அருள்பணி ஜீன் மார்க் ஃபோர்னியர்  காப்பாற்றினார்.  பேராலயத்தின் கோபுரத்தில் ஒரு சில புனிதப் பொருள்கள் பதிக்கப் பட்டிருந்தன என்றும், கோபுரம் தீயினால் முற்றிலும் எரிந்து விழுந்தபோது, இந்தப் புனிதப் பொருள்களும் எரிந்து போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பேராலயத்தின் நடுவே அமைந்திருந்த பீடமும், பீடத்திற்குப் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தங்கச் சிலுவையும் தீயினால் தீண்டப்படாமல் இருந்தன
என்றும், 15 ஆம் நூற்றாண்டு முதல், இந்த ஆலயத்தில்
பயன்படுத்தப்பட்டு வந்த மாபெரும் இசைக்கருவி யான ‘ஆர்கனு’ம் தீயினால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. இப்பேராலயத்திற்குப் புகழ்
சேர்க்கும் வண்ணம் அமைந் திருந்த பெரும் வண்ணக்
கண்ணாடி ஓவியங்களும், அவற்றைத் தாங்கி நின்ற மரச்சட்டங்களும் தீயிலிருந்து காக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. நோத்ருதாம் பேராலயத்தின் முன்புறம்
அமைந்துள்ள இரு கோபுரங்களைக் காப்பதற்கு,
தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட போராட்டம் வெற்றியளித்தது என்பதும், அவ்விரு கோபுரங்களும், அவற்றில் வைக்கப்பட்டிருந்த ஆலய மணிகளும் காக்கப்பட்டன என்பதும், குறிப்பிடத்தக்கவை. திருத் தந்தை பிரான்சிஸ் இத்தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Comment