குடந்தை ஞானி
மௌனம் கலையட்டும்! ஒன்றியம் விடியட்டும்!
- Author குடந்தை ஞானி --
- Monday, 13 Jun, 2022
வலதுசாரித்தனத்தின் சூட்சமமே கள்ள மௌனம்தான். அதன் சூத்திரதாரிகள் யார்? எங்கிருந்து இயங்குகிறார்கள்? யார் அவர்களை ஆட்டுவிக்கிறார்கள்? என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல்வேறு தளங்களில், பல்வேறு பெயர்களில், பல்வேறு அமைப்புகளில், பல்வேறு நிலைகளில் அவர்கள் இடைவிடாமல் செயல்பட்டுகொண்டேயிருப்பார்கள்.
வலதுசாரிகள் அனைவருடைய நோக்கம் ஒன்றுதான்; ஆனால், அதனை அடைவது பல்வேறு வழிகளாக, வழிமுறைகளாக இருக்க வேண்டும் என்பதில் தலைமை மிகவும் கவனமாக இருக்கும். இவர்களுக்கு புரியாத அடைமொழிகள் அவர்களுக்கு ஏராளம். மேலும் தங்களுக்குள் பல்வேறு இரகசிய சங்கேத மொழிகளை, குறியீடுகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்வர்.
ஒருவர் ஓர் அமைப்பில் மட்டும் செயல்படமாட்டார். பல்வேறு அமைப்புகளில் தன்னை உறுப்பினராக்கிக்கொண்டு தொடர்ந்து இயங்கிக் கொண்டே யிருப்பார். ஒருவர் (வாஜ்பேயி போல) மிதவாதத்தைக் கடைப்பிடித்து தன்னை யோக்கியன் போல காட்டிக்கொள்வார். அதற்கு நேர் எதிராக (அத்வானியைப் போல) ஒருவர் தீவிரவாதத்தைக் கடைப்பிடித்து மிக மிக வேகமாக முன்னேறி வருவார். நேரத்திற்கேற்ப முகமூடிகளை மாற்றிக்கொண்டேயிருப்பர். அதே சமயம் ஆக்டோபஸ் முறையில் ஒவ்வொருவரும் தனக்கான, தங்களின் இயக்கத்திற்கான இரையைத் தேடிக்கொண்டேயிருப்பர். ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு இயங்குநிலைகளில் நகர்ந்துகொண்டேயிருக்கும்; முன்னேறி கொண்டே யிருக்கும்.
வலதுசாரித்தனத்தில் ஒருவேளை குற்றம் வெளியே தெரிந்தால், வெளி உலகுக்கு தெரியவந்தால், ஒன்று இரகசியமாக கோல்வால்கர் வழியில் மன்னிப்பு கடிதம் எழுதுவார்கள்; இல்லையேல், சம்பந்தமே இல்லாத வேறொரு செயல்படாத அமைப்பை பலிகடாவாக்கிக்கொண்டு தப்பு செய்தவர்கள் தப்பித்து விடுவார்கள். ஒருவேளை தனிநபர்கள் வரிசையில் அந்தக் குற்றவாளி அடையாளம் காணப்பட்டால், ‘அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்று கைக்கழுவுவார்கள். ‘அது அவர்தம் தனிப்பட்ட கருத்து!’ என்று ஒதுங்கிக்கொள்வார்கள். இதுதான் வலதுசாரித்தனத்தின் சூத்திரமே. மேற்கண்ட ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் மிகப்பெரிய விளக்கம் மறைந்திருக்கிறது. ஒருமுறைக்கு இருமுறை மேற்கண்ட வரிகளைப் படிக்கிறபோது, வலதுசாரித்தனத்தின் சூட்சமத்தையும் சூத்திரத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், வாஜ்பேயி தலைமையிலான ஆட்சி அமைந்த நாள் முதல் மோடியின் தலைமையிலான கடந்த எட்டு ஆண்டுகளில், வலதுசாரி அரசியலால் தேசம் துண்டாடப்பட்டிருக்கிறது. காஷ்மீர் தொடங்கி, கன்னியாகுமரி வரை, லட்சத்தீவு தொடங்கி அந்தமான் வரை அவர்கள் ஆக்டோபஸ் முறையில் இயங்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் முன்மொழிந்த இந்தியக் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் முதல் இராம்நாத் கோவிந்த் வரை அனைவருமே வலதுசாரி பொம்மலாட்ட கூத்துக்கலையின் கவர்ச்சி பொம்மைகளே! முஸ்லீம் என்று முன்னிலைப்படுத்துவார்கள்! தலித் என்று தன்னிலை விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், நாக்பூர் தலைமை மட்டும் (பூ) நூலில் இழையோடும்; விளையாடும்.
யோகிகளும் மோடிகளும் கோலோச்சுவர். முற்றும் துறந்தவரும் முற்றும் துறவாதவரும் அரியணையில் அடாவடித்தனம் செய்திடுவர். வலதுசாரித்தனத்தில் குறைகளைச் சொல்பவர்கள்தான் இங்கே கூண்டில் ஏற்றப்படும் குற்றவாளிகள். காரணம் ஜனநாயகம் என்பது இவர்களிடம் கொஞ்சமும் இல்லை என்பதால் எதேச்சதிகாரம் மட்டுமே மிஞ்சியிருக்கும். அம்பேத்கர் பேரன் வரை ஸ்டான் சுவாமி வரை அனைவருமே இவர்களைப் பொறுத்தவரை தேசத் துரோகிகள்தான்.
இங்கே இந்துத்துவத்தின் வலதுசாரித்தனம், மதத்தால் மட்டுமே கட்டமைக்கப்பட்டதால், மொழி இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல; இனம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பொட்டல் வெளியில் ஆவாரம் பூத்தது போல, பாலைவனச் சோலையாக (ஒன்றிய, மாநிலத்) தேர்தல் என்று ஒன்று வந்துவிட்டால், சிட்டாய் பறந்து இரவு பகல் பாராமல் பிரச்சார சேவகம் செய்வார்கள். அதன்பின் மறைந்துவிடுவார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்துவிட்டு, இந்தியாவின் சாபக்கேடான சாதிகளின் அடிப்படையில் வாக்களிப்பவர்களை கூறுபோட்டுவிட்டு, சிதைத்து சின்னா பின்னமாக்கிவிட்டு, மீறி வாக்களிக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையை மட்டுமே தங்களுக்கு சாதகமாக்கி, சனாதனத்தின் பிடியை மெல்ல மெல்ல இறுக்குவது இவர்களின் இயல்பு. அனைத்தையும் மீறி கொக்கரிக்கும் பருக் அப்துல்லாக்களையும் மம்தாக்களையும் ஸ்டாலின்களையும் பினராய்களையும் திருமா வளவன்களையும் இருட்டடிப்புச் செய்வதும் உதாசீனப்படுத்துவதும் இவர்களின் அணுகுமுறை.
உள்நாட்டில் கொட்டமடிக்கும் இவர்களின் சனாதனக் கொட்டம் ஐநாவிலும், ஐரோப்பிய யூனியனிலும், ஜி எட்டிலும் கொஞ்சமும் எடுபடாது. தலைக்குனிவைத்தான் கொண்டு வரும். உள்நாட்டில் ஒரு முகமூடி, உலக நாடுகளுக்கு ஒரு முகமூடி. புலித்தோல் போர்த்திய பசுக்களாக, கொம்புகளையும் காம்புகளையும் மறந்துவிட்டு குளம்புச் சத்தம் கேட்க, இவர்கள் சனாதன வேட்டைக்குப் போவார்கள். ‘என்னைக் காட்டிக்கொடுப்பவனே, உன் காலடிச் சத்தமே உன்னைக் காட்டிக்கொடுக்கிறதே!’ என்றால் வாலாட்டி மௌனப்புன்னகையை உதிர்ப்பார்கள். காந்தி படுகொலை முதல் சம்ஜூதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வரை, கோத்ரா முதல் பீமா கோரேகான் கலவரம் வரை இதுதான் நடந்தது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதல் இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு நீக்கம் வரை இதுதான் நடந்தது. பாபர் மசூதி முதல் ஞானவாபி வரை இதுதான் நடக்கிறது.
அதிகாரம் மட்டுமே நோக்கம் என்பதால் அவற்றை அடைவதற்கான நேர்மையான வழிகளைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். குதிரை பேரம் பேசி மணிப்பூர் முதல் மத்தியப்பிரதேசம் வரை, ஹரியானா முதல் புதுச்சேரி வரை இதுதான் நிரந்தரம். ஆதினங்களின் பல்லக்கு பயணம்போல வலதுசாரிகளின் சுகமான பயணம் இந்த அரசியல் பயணம். கடந்த காலத்தில் தாங்கள் இழிவுப்படுத்தப்பட்டதை, தேசத்தைக் காட்டிக்கொடுத்ததைப் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படமாட்டார்கள். இரட்டை நாக்கும் இரட்டை வேடமும் இவர்கள்தம் பிறப்புரிமை போலும்.
(ஸல்) முகம்மது நபியைப் பற்றி ஏன் இப்படி பேசினாய்? என்றால் வளைகுடா நாடுகள் இந்தியாவின் குரல்வளையை நெரித்தால், சுற்றி வளைத்தால் அப்படியே கோல்வால்கர் பல்டி அடிப்பார்கள், சாவர்க்கர் குட்டிக்கரணம் போடுவார்கள். பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் இவர்களின் உடல் வாகு. இந்தியாவின் எல்லைக்கு வெளியே வாழும் முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு ஒரு மாதிரியும் உள்நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு ஒரு மாதிரியும் இவர்கள் செயல்படுவார்கள். ஓவியர் எம்.எஃப். ஹூசைன் வரைந்த ஓவியம் எங்களை இழிவுப்படுத்திவிட்டது என்று வானத்துக்கும் வைகுண்டத்துக்கும் குதித்த இவர்கள், நீங்கள் ஏன் (ஸல்) முகம்மது நபிகளை இழிவுப்படுத்தினீர்கள் என்றால் வாய்மூடி சிரிப்பார்கள்.
இதுநாள் வரை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, அல்லது அமைச்சரவையின் பிரதிநிதியோ, அல்லது நாக்பூர் தலைமையோ எவ்வித விளக்கமோ வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பதை என்னவென்று சொல்வது? பெரும்பான்மைவாதம் சரித்திரத்தில் வென்றதாக ஒருபோதும் பதியப்படவில்லை. ஹிட்லர் முதல் ராஜபட்சே வரை இதுதான் வரலாறு. ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு கவனத்தில் கொள்ள, வேலையின்மை, விலைவாசி உயர்வு, குறைந்துவரும் அந்நிய செலவாணி.. என்று ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் தேசவசமிருக்க, மாட்டுக்கறி, இந்தி, ரேஷன், பர்தா, குடியுரிமை, லிங்கம், குதுப்மினார், மதமாற்றம், கர்வாப்சி என்று துக்ளக் பாணி கழிசடை அரசியலை கையிலெடுக்க வேண்டாம். மாண்புமிகு குடியரசு தலைவரே, பிரதமரே, உள்துறை அமைச்சரே, உங்களின் மௌனம் கலையட்டும்! மதத்தை முன்னிலைப்படுத்தாமல் மனிதத்தை முன்னிலைப்படுத்தி ஒன்றியத்தை நன்றாக ஜனநாயகப்படுத்துங்கள்! பெரும்பான்மை ஒருபோதும் வெல்லாது என்பதால் உங்கள் மௌனம் இன்றே கலையட்டும்! ஒன்றியம் விடியட்டும்!
Comment