No icon

கொல்கத்தா

புனித அன்னை தெரசா இறந்த 25 ஆம் ஆண்டு யூபிலி விழா

புனித அன்னை தெரசா மறைந்ததன் 25 ஆம் ஆண்டு ஜூபிலி கொண்டாட்டம் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் மற்றும் பிற குழந்தைகளுக்காக மாநிலத் தலைநகரில் ஒரு புதிய தினப் பராமரிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற புனித அன்னை தெரசா இறந்த 25 ஆம் ஆண்டு யூபிலி விழாக் கொண்டாட்டத்தின்போது, அன்பின் பணியாளர்கள் சபையின் சகோதரிகள் கொல்கத்தாவின் தெருக்களில் சென்று ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர்.

இந்தத் தினப் பராமரிப்பு மையம் சத்தான உணவு, உடைகள் மற்றும் குழந்தைகளுக்கான பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதோடு, அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வத்தைப் பொறுத்து வரைதல் வகுப்புகள் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளை ஏற்பாடு செய்யும் என்று அருள்சகோதரி கிறிஸ்டி என்பவர்  கூறினார்.

மேலும், இந்தியா முழுவதும் இச்சபையால் நடத்தப்படும் அனைத்துக் கன்னியர் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் அவரது நினைவு தினத்தை சிறப்புத் திருப்பலி  மற்றும் இறைவேண்டல் கொண்டாட்டங்களுடன் நினைவு கூர்ந்தன என்றும் சகோதரி கிறிஸ்டி கூறினார். அன்னை தெரசா 25 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் இன்றும் உயிருடன் இருப்பதாக நான் உணர்கிறேன் என்றும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்காக அவர் தொடங்கிய பணிகள் வழியாக அவரது பாரம்பரியம் தொடர்ந்து வாழ்கிறது என்று யூபிலி விழாத் திருப்பலியைத் தலைமை ஏற்று சிறப்பித்த கொல்கத்தாவின் பேராயர் தாமஸ் டிசோசா கூறினார். மேற்கு வங்கக் கத்தோலிக்கச் சங்கம் அன்னை தெரசா இல்லத்திற்கு அருகில் உள்ள ஆலன் பூங்காவில் அமைந்துள்ள அன்னையின் திருவுருவத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 1950 ஆம் ஆண்டு அன்னை தெரசா நிறுவிய பிறரன்பு சபையில் தற்போது ஏறத்தாழ 4,500 சகோதரிகள் உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 136 நாடுகளில் இச்சபைக்கு 700 இல்லங்கள் உள்ளன.

Comment