Namvazhvu
Covid 19-Madurai Archdiocese மதுரை உயர்மறைமாவட்டத்தின்  அவசரகால உதவி 
Friday, 24 Apr 2020 11:15 am
Namvazhvu

Namvazhvu

மதுரை உயர்மறைமாவட்டத்தின்  அவசரகால உதவி 
கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று நோயினால் ஒட்டு மொத்த உலகம் செயலிழந்து உள்ளது. இச்சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தொற்று நோய் மேலும் பரவாமல் இருக்க இரவு பகல் பாராது பணியாற்றிக்கொண்டிருக்கின்ற பணியாளர்கள் (ஆட்சியாளர்கள், அரசு பணியாளர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்,காவல்துறையினர் ) அனைவருக்கும் தோழமையையும், ஒத்துழைப்பையும் நல்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க வேண்டியது அனைவருடைய பொறுப்பு. 


இதனை உணர்ந்து, மதுரை உயர்மறைமாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சார்பாக, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோனிபாப்புசாமி அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியாளர் திரு.டாக்டர். வினாய் இ.ஆ.ப அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 10 இலட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய உணவு பொருள்களை (அரிசி 5000 கிலோ, துவரம் பருப்பு 1000 கிலோ, உளுந்தம் பருப்பு 500 கிலோ, சமையல் எண்ணெய் 500 லிட்டர், மிளகு 125 கிலோ, சீரகம் 125 கிலோ, பூண்டு 200 கிலோ, கடுகு 125 கிலோ, மசாலா பொடி 75 கிலோ, புளி 150 கிலோ, குளியல் சோப் 1000) வழங்கினார். 
மேலும் மதுரை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறைமாவட்டத்திற்கு உட்பட்ட தேனி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களிலும் தேவையில் உள்ள 8300 ஏழைக்குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. 
மதுரை உயர்மறைமாவட்டத்திற்கு உட்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. 
தொடர்ந்து அரசோடு இணைந்து மக்களின் நல்வாழ்வுக்காக மதுரை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறைமாவட்டம் பிறர்நல சேவையை செய்யும். மக்களின் நல் வாழ்வுக்காக தியாக மனப்பான்மையோடு அயராது உழைக்கும் ஆட்சியாளர்கள், அரசு பணியாளர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவோம். ஓன்றாக இணைந்து கொரோனா நோயை வெல்வோம்.