Namvazhvu
குடந்தை ஞானி வேளாங்கண்ணி: கடைகளில் அழுகிய மீன்கள், இறைச்சிகள் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
Friday, 01 Jul 2022 11:17 am
Namvazhvu

Namvazhvu

July 01/ 2022: வேளாங்கண்ணியில் தரமற்ற, அழுகிய 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த 10 கடைகளுக்கும் தலா ரூ. 10,000  வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

வேளாங்கண்ணி பேருந்து நிலையம் முதல்  ,  கடற்கரைவரை இரண்டு புறமும்  ஏராளமான  வறுவல் மீன் கடைகள்  செயல்பட்டு வருகின்றன. இங்கு தரமற்ற, அழுகிய உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய  புகார் வந்திருக்கிறது.
இதனைத்  தொடர்ந்து  உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 நபர்கள் கொண்ட குழுவினர்  வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடிர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் தரமற்ற அழுகிய நிலையிலும், நீண்ட நாள்களான பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்க்கப்பட்ட நிலையிலும் குளிர்சாதன பெட்டியில் 10 -க்கும் மேற்பட்ட கடைகளில்  வைக்கப்பட்டிருந்த  சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.


தொடர்ந்து கடை ஒன்றுக்கு ரூ. 10 ,000 வீதம், ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரித்தனர். இச்சம்பவம்  வேளாங்கண்ணியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.