Namvazhvu
குடந்தை ஞானி இந்தோனேசியாவில் 2022 ஆம் ஆண்டு மனித மாண்பு ஆண்டு
Thursday, 13 Jan 2022 09:45 am
Namvazhvu

Namvazhvu

ஜனவரி 8 ஆம் தேதி, கடந்த சனிக்கிழமையன்று புதிய மேய்ப்புப் பணித் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசிய ஜகார்த்தா உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் இக்னேஷியஸ் ஸுஹர்யோ ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள்,  இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா உயர்மறைமாவட்டம், "அன்பு, உதவி, சாட்சி" என்ற முழக்கத்தின் கீழ் ஐந்தாண்டு மேய்ப்புப் பணிக்கான தனது பயணத்தைத் தொடங்குகிறது என்று அறிவித்தார்.
2022 ஆம் ஆண்டை மனித மாண்பின் ஆண்டாகச் சிறப்பிக்க இருக்கிறது என்றும், இதனைப் புனித விண்ணேற்பு மரியன்னைப் பேராலயத்தில் நடைபெற்ற நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது, அறிவித்ததாகவும் கர்தினால் தனது செய்தியில் கூறியுள்ளார்.       
"நாங்கள் திருஅவையின்  சமூகக் கோட்பாட்டை ஆராய்ந்து,  எங்கள்  நம்பிக்கை உறுதியானதாக இருக்க ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறிய விரும்புகிறோம்," என்றும் விளக்கிய கர்தினால் இக்னேஷியஸ் அவர்கள்,  இதனை அடிப்டையாகக் கொண்டு, மனித மாண்பை மதித்தல், பொதுநன்மையை நாடுதல், பிறர் மீது அக்கறை காட்டுதல், ஒற்றுமையை விரிவுபடுத்துதல், மிகவும் பின்தங்கியவர்கள்மேல்    அதிக கவனம் செலுத்துதல்,  மற்றும் படைப்பை ஒரு பொதுஇல்லமாகப் பாதுகாத்தல் என ஐந்து காரியங்களில் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துவது அவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றோம் என்றும் கர்தினால் சுட்டிக்காட்டினார்.   
"மனித மாண்பைப் பாதுகாக்க, பொது நலனுக்காக வாழ வேண்டியது அவசியம் என்றும், இந்தப் பொது நன்மையை உணர, ஒற்றுமை உணர்வு பேணப்பட வேண்டியது அவசியம் என்றும், பொது நலனைப் பாதுகாப்பதில், எப்போதும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள்மேல் கவனம் செலுத்தவேண்டும் என்றும்  கூறிய கர்தினால் சுஹாரியோ,  மேலும், படைப்பை ஒரு பொதுஇல்லமாகப் பாதுகாக்கும் அர்ப்பணிப்புடன் இவை அனைத்தும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறிய கர்தினால் அவர்கள், மேற்கண்ட இந்த ஐவகைப் பண்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.