Namvazhvu
அகதியின் குரலாக திருத்தந்தை பிரான்சிஸ் - 02.05.2021
Monday, 26 Apr 2021 12:05 pm
Namvazhvu

Namvazhvu

அகதியின் குரலாக திருத்தந்தை பிரான்சிஸ் - ஐநா அதிகாரி புகழாரம்

சமுதாயத்தின் விளிம்புநிலைக்கு அதிகம் தள்ளப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், தங்கள் சொந்த இடங்களைவிட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர்வோர், குடிபெயர்ந்தோர் போன்ற மக்களின் குரலாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருக்கிறார் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் அதிகாரியான பிலிப்போ கிராந்தி (UNHCR) கூறியுள்ளார்.
UNHCR எனப்படும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராந்தி (Filippo Grandi) அவர்கள், ஏப்ரல் 16 ஆம் தேதி வெள்ளியன்று, திருப்பீடத்தில், திருத்தந்தையை தனியே சந்தித்து பேசியபின், உலக அளவில் இடம்பெறும் புலம்பெயர்வு விவகாரம் குறித்து திருத்தந்தை ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உலக அளவில் காட்டப்படும் தோழமை, மற்றும் பராமரிப்பு பற்றி, திருத்தந்தையும், தானும் கலந்துரையாடியதாக, செய்தியாளர்களிடம்  தெரிவித்த கிராந்தி அவர்கள், UNHCR அமைப்பு, புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோருக்கு உதவுவதில், திருப்பீடத்தோடு கொண்டுள்ள ஒத்துழைப்பை ஊக்குவிக்க விரும்புவதாகக் கூறினார்.
பெருமளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நாடுகள், அவர்களை சமுதாயத்தோடு ஒருங்கிணைத்து, அவர்களுக்கு பாதுகாப்பான இடம், மற்றும், ஏனைய உதவிகளை வழங்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்கு, நல்ல பதில்கள் கிடைத்து வருகின்றன என்றும் கிராந்தி அவர்கள் கூறினார்.