வளரும் நாடுகள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெருமளவான கடன் சுமைகளால் துன்புற்றுவரும்வேளை, அந்நாடுகளின் கடன்கள் மன்னிக்கப்படவும், அவர்களுக்கு நிதி ஆதரவு வழங்கப்படவும் வேண்டும் என்று, கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள், பணக்கார நாடுகளை வலியுறுத்தியுள்ளன.
ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்களும், மத்திய வங்கி நிர்வாகிகளும், பிப்ரவரி 26 ஆம் தேதி வெள்ளியன்று நடத்திய மெய்நிகர் கூட்டத்தையொட்டி, அறிக்கை வெளியிட்ட, கத்தோலிக்க சமுதாய நீதி அமைப்புகள், ஏழை நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படுமாறும், உலகளாவிய ஒத்துழைப்பு, மற்றும் தோழமையுணர்வோடு, தற்போதைய நெருக்கடிநிலை களையப்பட உதவுமாறும், உலகின் முக்கிய பணக்கார நாடுகளுக்கு அழைப்புவிடுப்பதாகக் கூறியுள்ளன.
தாங்கிக்கொள்ள முடியாத தியாகங்கள் மேற்கொண்டு, கடன்கள் செலுத்தப்படுவதை ஏற்கமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்புகள், பல வறிய நாடுகளின் நலவாழ்வு அமைப்புகளை, கோவிட்-19 வலுவிழக்கச் செய்துள்ளது என்று கூறியுள்ளன.
கோவிட்-19ஆல், ஏழை நாடுகளில் பலர் உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கான மக்கள் வேலைகள், வாழ்வாதாரங்கள் மற்றும், பொருளாதாரத்தையும் இழந்துள்ளனர் என்றுரைத்துள்ள அந்த அமைப்புகள், ஏற்கெனவே நிலவும் சமத்துவமற்ற நிலைகளை, கூடுதலாக மோசமடையச் செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளன.